Wikipedia

Search results

Thursday, March 17, 2016

டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் தமிழகத்திற்கு வருகின்றன


டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் மாநாட்டுக்குவருகின்றன
 
இரண்டே நாட்கள் தான் இடையில் -  உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

புரட்சிப் பூபாளம் பாடுவோம் - வாரீர், வாரீர்!!

தமிழர் தலைவரின் அன்பழைப்பு

 

பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் - திராவிடர் கழகம் - இருக்காது என்று ஆரூடம் கணித்த ஆலமரத்தடி ஜோசிய ருடன் அவாளின் அமைப்புகளும், இன்று பெரும் பதற்றத்தில் துடிக்கின்றன - நெருப்பில் காலை வைத்தவன் நிலைபோல!

காரணம் தந்தை பெரியார் என்ற தத்துவம். அய்யா உடலால் மறைந்து 43 ஆண்டுகளுக்குப்பின் பேருருவாய் (விஸ்வரூபம்)  இந்தியாவின் பல மாநிலங்களிலும், இளைய தலைமுறையினரின் பாசறையான பல்கலைக் கழகங்களிலும் தோன்றி, ஆரிய வர்ணாசிரமத்தின் நச்சுப் பல்லை அகற்றிட நாடு தழுவிய உணர்வாளர்களாக உள்ளார்கள்!

மாணவ சிங்கக்குட்டிகளால்
எரிக்கப்பட்டது மனுதர்மம்

மனுதர்ம சாஸ்திரம் என்ற ஜாதிக்கான மூலத்தை அவர்கள் நெருப்பில் போட்டுப் பொசுக்குகிறார்கள். பெரியாரும், - அம்பேத்கரும் செய்தவை, வரலாறு திரும்பும் என்பதற்கு எடுத்துக்காட்டாக டில்லி - மற்ற வட மாநிலப் பல்கலைக் கழக மாணவப் புரட்சியாளர்களால் சுட்டெரிக்கப்படுகிறது!

பெரியாரின் லட்சியப் பயணம் “சுய அபிமான்” என்ற ஹிந்திச் சொற்களில் சுயமரியாதை பயணம் செய்கிறது.

தோழர்களே உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

அந்த மாணவச் சிங்கக் குட்டிகள் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகத்தில் - நமது மாநாடுகளுக்கு வந்து, கொள்கை முழக்கங்களை எழுப்ப உற்சாகத்துடன் கிளம்பி வருகின்றனர்.  அவர்களே பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கொள்கை முழக்கமும், சுயமரியாதைச் சூளுரையும் எடுக்கும் பாசறையாக பெரியார் உலக மாநாடுகளை எண்ணும்போது,
என்னருந்தோழர்காள்,

எம் அரும் கொள்கைக் குடும்ப உறுப்பினர்களே! நீங்கள் வீட்டிலா இருக்கப் போகின்றீர்கள்? லட்சோப லட்சமாய் திரளும் கருஞ்சட்டை வீரர்களில் உங்கள் முகம் தெரிய வேண்டாமா? உங்கள் பங்களிப்பு மிளிர வேண்டாமா?

1.12.1959 புரட்சிக் கவிஞரின் ‘குயில்’ ஏட்டில் ‘கேட்டலும் கிளத்தலும்‘ என்ற பகுதியில் இதோ ஓர் செய்தி. அப்படியே தருகிறோம்.
திராவிடர் கழகம் செயலற்றுப் போகுமா?
- புரட்சிக் கவிஞர் பதில்

கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று........................................................................... எண்ணுகிறார்.  உங்கள் கருத்தென்ன?
சித்தானந்தம், முக்தியால்பேட்டை.

கிளத்தல்: ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. தி.க. அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்துக்கள் இயற்கையோடியைந்தவை. தி.க அழிவது என்பது இந்த ஊழியில் இல்லை.

புரட்சிக் கவிஞர் பொருள் மிகுந்த விடையின் ஆழம் என்ன? அகலம் என்ன? நீளம் என்ன - புரிய வேண்டுமா?
உடனே புறப்படுங்கள் - தாமதியாமல் திருச்சி - சிறுகனூர் பெரியார் உலக  மாநாடுகளுக்கு

ஜெர்மன் பேராசிரியரும் வருகிறார்

ஜெர்மன் நாட்டிலிருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் பெரியார் பற்றாளர் பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ்  மாநாட்டில் பங்கேற்கிறார். (இவர்தான் 2016 ஜூலையில் பெரியார் பன்னாட்டு பகுத்தறிவாளர்கள் மாநாட்டை ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடத்திடத் திட்டமிட்ட ஆய்வுப் பேராசிரியர் ஆவார்!)

‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’
என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிக்கான
இலக்கியம் அல்லவா இம்முயற்சி, அது மட்டுமா?

ஏப்ரல் 9அன்று பீகார் முதல் அமைச்சருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது!

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் அமெரிக்கப் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருக்கு “சமூக நீதிக்கான வீரமணி விருது” வழங்கும் பெரு விழா - கொள்கை நிகழ்வாக டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம இளங்கோவன் ஆகிய இயக்குநர்களால் நடத்தப்பட உள்ளது.

ஆலமரம் மட்டுமல்ல, தழைத்த விழுதுகளும் பலமாகி உலக அளவில் உயர்ந்து நிற்கிறது என்பது எதைக் காட்டுகிறது?
ஊழி உள்ளவரை தி.க.வை அழிக்க முடியாது என்பதைத் தானே!
பெரியார் இயக்க வெற்றிக்கு என்றும் உரமிடுபவர்கள் அதன் கொள்கை எதிரிகள்தானே!

தனித்தும் பலம் வாய்ந்த அமைப்பு! எதிர்ப்பாலும் வலிமை மிக்கது இவ்வமைப்பு - அதைக் காண வேண்டுமா?

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் 10.3.1945 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுப்பிய பொறிதட்டிய கேள்வி இதோ: சிந்தியுங்கள்.

“இந்த பல ஆயிரம் வருஷங்களில் - கீழ் ஜாதியாய்ப் பிறந்து, மேல் ஜாதியாய் செத்த மனிதன் (ஹிந்து மதத்தில்) ஒருவன்கூட கிடையாது.

ஜாதியே இல்லாமல் பிறந்து ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை; வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்ற அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ, “சாமியாய், ரிஷியாய், மன்னனாய், மகாத்மாவாய்” செத்து இருக்கலாம்.

ஆனால் ‘பறையனாய்ப்’ பிறந்து ‘பிராமணனாய்’ செத்தவரோ, ‘பிராமணனாய்’ பிறந்து ‘பறையனாய்’ செத்தவனோ என்றும்‘ இல்லை.” (‘குடிஅரசு’ 1945)

இன்னும் இரண்டே நாட்கள்தான்

மாநாடு நாளை மறுநாள் இன்னும் இரண்டே நாட்கள்தான் இடைவெளி!
வந்து பாருங்கள்!

புதியதோர் புரட்சியின் பூபாளம் அங்கே பாடப்பட்டு, வீறு நடை போட்ட வீரர்கள் கோட்டமாக அதன் செயல்பாடு  பொங்குமாங் கடலெனப் பொங்கி வழியும் காட்சியைக் காண வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

கி.வீரமணி   
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
17.3.2016

No comments:

Post a Comment