Wikipedia

Search results

Thursday, May 30, 2013

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை  டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப் பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்கூபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.
விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.
கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள். கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

No comments:

Post a Comment