Wikipedia

Search results

Thursday, March 17, 2016

டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் தமிழகத்திற்கு வருகின்றன


டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் மாநாட்டுக்குவருகின்றன
 
இரண்டே நாட்கள் தான் இடையில் -  உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

புரட்சிப் பூபாளம் பாடுவோம் - வாரீர், வாரீர்!!

தமிழர் தலைவரின் அன்பழைப்பு

 

பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் - திராவிடர் கழகம் - இருக்காது என்று ஆரூடம் கணித்த ஆலமரத்தடி ஜோசிய ருடன் அவாளின் அமைப்புகளும், இன்று பெரும் பதற்றத்தில் துடிக்கின்றன - நெருப்பில் காலை வைத்தவன் நிலைபோல!

காரணம் தந்தை பெரியார் என்ற தத்துவம். அய்யா உடலால் மறைந்து 43 ஆண்டுகளுக்குப்பின் பேருருவாய் (விஸ்வரூபம்)  இந்தியாவின் பல மாநிலங்களிலும், இளைய தலைமுறையினரின் பாசறையான பல்கலைக் கழகங்களிலும் தோன்றி, ஆரிய வர்ணாசிரமத்தின் நச்சுப் பல்லை அகற்றிட நாடு தழுவிய உணர்வாளர்களாக உள்ளார்கள்!

மாணவ சிங்கக்குட்டிகளால்
எரிக்கப்பட்டது மனுதர்மம்

மனுதர்ம சாஸ்திரம் என்ற ஜாதிக்கான மூலத்தை அவர்கள் நெருப்பில் போட்டுப் பொசுக்குகிறார்கள். பெரியாரும், - அம்பேத்கரும் செய்தவை, வரலாறு திரும்பும் என்பதற்கு எடுத்துக்காட்டாக டில்லி - மற்ற வட மாநிலப் பல்கலைக் கழக மாணவப் புரட்சியாளர்களால் சுட்டெரிக்கப்படுகிறது!

பெரியாரின் லட்சியப் பயணம் “சுய அபிமான்” என்ற ஹிந்திச் சொற்களில் சுயமரியாதை பயணம் செய்கிறது.

தோழர்களே உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

அந்த மாணவச் சிங்கக் குட்டிகள் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகத்தில் - நமது மாநாடுகளுக்கு வந்து, கொள்கை முழக்கங்களை எழுப்ப உற்சாகத்துடன் கிளம்பி வருகின்றனர்.  அவர்களே பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கொள்கை முழக்கமும், சுயமரியாதைச் சூளுரையும் எடுக்கும் பாசறையாக பெரியார் உலக மாநாடுகளை எண்ணும்போது,
என்னருந்தோழர்காள்,

எம் அரும் கொள்கைக் குடும்ப உறுப்பினர்களே! நீங்கள் வீட்டிலா இருக்கப் போகின்றீர்கள்? லட்சோப லட்சமாய் திரளும் கருஞ்சட்டை வீரர்களில் உங்கள் முகம் தெரிய வேண்டாமா? உங்கள் பங்களிப்பு மிளிர வேண்டாமா?

1.12.1959 புரட்சிக் கவிஞரின் ‘குயில்’ ஏட்டில் ‘கேட்டலும் கிளத்தலும்‘ என்ற பகுதியில் இதோ ஓர் செய்தி. அப்படியே தருகிறோம்.
திராவிடர் கழகம் செயலற்றுப் போகுமா?
- புரட்சிக் கவிஞர் பதில்

கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று........................................................................... எண்ணுகிறார்.  உங்கள் கருத்தென்ன?
சித்தானந்தம், முக்தியால்பேட்டை.

கிளத்தல்: ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. தி.க. அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்துக்கள் இயற்கையோடியைந்தவை. தி.க அழிவது என்பது இந்த ஊழியில் இல்லை.

புரட்சிக் கவிஞர் பொருள் மிகுந்த விடையின் ஆழம் என்ன? அகலம் என்ன? நீளம் என்ன - புரிய வேண்டுமா?
உடனே புறப்படுங்கள் - தாமதியாமல் திருச்சி - சிறுகனூர் பெரியார் உலக  மாநாடுகளுக்கு

ஜெர்மன் பேராசிரியரும் வருகிறார்

ஜெர்மன் நாட்டிலிருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் பெரியார் பற்றாளர் பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ்  மாநாட்டில் பங்கேற்கிறார். (இவர்தான் 2016 ஜூலையில் பெரியார் பன்னாட்டு பகுத்தறிவாளர்கள் மாநாட்டை ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடத்திடத் திட்டமிட்ட ஆய்வுப் பேராசிரியர் ஆவார்!)

‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’
என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிக்கான
இலக்கியம் அல்லவா இம்முயற்சி, அது மட்டுமா?

ஏப்ரல் 9அன்று பீகார் முதல் அமைச்சருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது!

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் அமெரிக்கப் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருக்கு “சமூக நீதிக்கான வீரமணி விருது” வழங்கும் பெரு விழா - கொள்கை நிகழ்வாக டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம இளங்கோவன் ஆகிய இயக்குநர்களால் நடத்தப்பட உள்ளது.

ஆலமரம் மட்டுமல்ல, தழைத்த விழுதுகளும் பலமாகி உலக அளவில் உயர்ந்து நிற்கிறது என்பது எதைக் காட்டுகிறது?
ஊழி உள்ளவரை தி.க.வை அழிக்க முடியாது என்பதைத் தானே!
பெரியார் இயக்க வெற்றிக்கு என்றும் உரமிடுபவர்கள் அதன் கொள்கை எதிரிகள்தானே!

தனித்தும் பலம் வாய்ந்த அமைப்பு! எதிர்ப்பாலும் வலிமை மிக்கது இவ்வமைப்பு - அதைக் காண வேண்டுமா?

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் 10.3.1945 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுப்பிய பொறிதட்டிய கேள்வி இதோ: சிந்தியுங்கள்.

“இந்த பல ஆயிரம் வருஷங்களில் - கீழ் ஜாதியாய்ப் பிறந்து, மேல் ஜாதியாய் செத்த மனிதன் (ஹிந்து மதத்தில்) ஒருவன்கூட கிடையாது.

ஜாதியே இல்லாமல் பிறந்து ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை; வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்ற அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ, “சாமியாய், ரிஷியாய், மன்னனாய், மகாத்மாவாய்” செத்து இருக்கலாம்.

ஆனால் ‘பறையனாய்ப்’ பிறந்து ‘பிராமணனாய்’ செத்தவரோ, ‘பிராமணனாய்’ பிறந்து ‘பறையனாய்’ செத்தவனோ என்றும்‘ இல்லை.” (‘குடிஅரசு’ 1945)

இன்னும் இரண்டே நாட்கள்தான்

மாநாடு நாளை மறுநாள் இன்னும் இரண்டே நாட்கள்தான் இடைவெளி!
வந்து பாருங்கள்!

புதியதோர் புரட்சியின் பூபாளம் அங்கே பாடப்பட்டு, வீறு நடை போட்ட வீரர்கள் கோட்டமாக அதன் செயல்பாடு  பொங்குமாங் கடலெனப் பொங்கி வழியும் காட்சியைக் காண வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

கி.வீரமணி   
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
17.3.2016

Sunday, March 6, 2016

இதுதான் “பார-தீய - (ஜனதா - ஆர்.எஸ்.எஸ்.) கலாச்சாரம் - புரிந்து கொள்வீர்!

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குக் கருத்தாளர் களை - பெரியார் - அம்பேத்கர் - காரல் மார்க்ஸ் சிந்தனை வயப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்களை அறவே அழித்து விரட்டிட, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP (ஏ.பி.வி.பி.) என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிட்டே ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் - மாணவர் தலைவர் கன்னையாகுமார், பேராசிரியர் கிலானி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
அடக்கு முறைகளால் லட்சியவாதிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், மாறாக, எரியும் நெருப்புக்கு எண்ணெய் - அதுவும் பெட்ரோல் ஊற்றியதுபோல மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர் இந்த ‘கோயபெல்ஸ்சின் குருநாதர்கள்’!
1. வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதக் குழு கன்னையாகுமாரை வாழ்த்தியதாக பொய்க் குற்றச்சாட்டு உடனடியாக கிழிந்து தொங்கியது; அந்த இணையதளமே தன்னுடையதல்ல - போலி என்று பதில் வந்தது.
2. போடப்பட்ட தேச விரோத முழக்கங்கள் Super Imposed on that video என்று ஆய்வில் நிருபிக்கப்பட்டு விட்டது.
செய்தியாளரும் முன்பே அது தன்னால் கொடுக்கப் பட்டதல்ல, திட்டமிட்டே சேர்க்கப்பட்டது என்று கூறி விட்டார்!
உள்துறை அமைச்சர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பலரும் இதற்குப் பொறுப்பேற்று சீரிய ஜனநாயக மரபு காக்க என்ன செய்திருக்க வேண்டும்? தாங்களே முன் வந்து பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டாமா? - சொரணையிருந்தால்!
பா.ஜ.க.வின் பாரதீய கலாச்சார தூதுவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கன்னையாகுமார் நாக்கைஅறுத்தால் ரூ.5 லட்சம்“
“கன்னையாகுமார் தலையை வெட்டினால் ரூ.11 லட்சம்“
- இது என்ன ஜனநாயக நாடா? காட்டு மிராண்டிகள், காபாலிகர்கள் ஆளுமையின்கீழ் நடக்கும் காட்டு நிர்வாகமா?
இது எந்த, யாருடைய தைரியத்தில் நடை பெறுகிறது?
இவர்கள்  குண்டர் தடுப்பு சட்டம், தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்குள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இதற்கு முன், ஆட்டுக்கறி சாப்பிட்டவரை, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று  அக்லக் என்ற முஸ்லிம் உ.பி.யில் கொல்லப்பட்டுள்ளதும், பலவிடங்களில் வன்முறை - ஒடுக்கப்பட்டோரை செருப்புக்கும், நாய்களுக்கும் ஒப்பிட்ட அமைச்சர்கள் எவ்வித பதவிப் பறிப்புக்கும் ஆளாகாமல் பவனி வந்து ராஜ்ய பாரம் நடத் துவது தான் - மோடி  கொடுத்த வளர்ச்சியா? முன்னேற்றமா? மாற்றமா? மக்கள் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் தொடங்கி பல காவல்துறை தலைவர்கள், நிர்வாகிகள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் நேற்றுகூட ஒரு கண்டன அறிக்கை- இந்த சட்டம் செயல்படாதுள்ள அவலத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனரோ!
இந்த கலாச்சாரம் பரவினால் மீண்டும் காட்டுத் தர்பார் (Jungle Raj) ஆட்சிக்குத்தானே செல்லும் சிந்தியுங்கள்.
- ஊசி மிளகாய்

Friday, March 4, 2016

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வகையறாக்கள் “செலக்டிவ் அம்னீஷியா”

மக்கள் மறதியே தமது பொது வாழ்வின் பொய்யுரைகளுக்கு அடிக்கட்டுமானம் என்று கருதி ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் அவரது ‘ஆத்மார்த்த’ சீடகோடிகளாகி அரசியல் பதவிகளை அனுபவிப்பவர்களான பா.ஜ.க.வுக்கும், திடீர் தேச பக்தி பீறிட்டுக் கிளம்பி பெரும் பிரவாகமாய் ஓடத் தொடங்கி விட்டது!
எங்கெங்கு காணினும் தேச பக்தி! மத்திய பல்கலைக் கழகங்களில் எத்தனை அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்ற தாக்கீது!
ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, டி. இராஜா முதலிய பல்வேறு கட்சியினரையும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர், மாணவர் கன்னையாகுமார் போன்ற பலர்மீதும் தேசத் துரோக (Anti - National) குற்றச்சாட்டு - 124A  செக்ஷனின் பிரயோகம்!
இவர்களது  பூர்வ சரித்திரம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்ற போலி நினைப்பு.
‘நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது’ என்று பாட்டிகள் கூறும் கிராமிய அனுபவ மொழி!
இந்தியாவின் தேசியக் கொடியாக  மூவர்ணக் கொடியை ஏற்க மறுத்தவர்கள் - மறுப்பவர்கள் இன்றும் அவர்கள் தலைமையகத்தில் (நாகபுரி) காவிக் கொடி, பாரத் மாதா கொடியை ஏற்றும் நபர்கள்.
ஹிட்லரின் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் இவர்தம் முந்தைய அடையாளம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடு (ஆங்கிலம்) ‘ஆர்கனைசர்’ அதன் மூன்றாவது இதழில் (17.7.1948ல்) “இந்தியாவின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியை ஏற்க முடியாதென்றும், காவிக் கொடியைத்தான் “தேசியக் கொடியாக” அறிவிக்க வேண்டும்“ என்றும் எழுதியது!
அது மட்டுமா?
“இந்தியாவை ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதையும் ஏற்க முடியாது. இந்தியா ஒரு இந்துத்துவா நாடு. செங்கோட் டையில் காவிக் கொடியைத் தான் பறக்க விட வேண்டும்’’ என்று ஆகஸ்டு 14, 1947 ஆர்கனைசர் ஏடு எழுதியது - மறந்து போய் விட்டதா? அல்லது மறைக்கப்படுகிறதா?
“இந்திய மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்த வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள் ளது. ஆனால் ஹிந்து மக்கள் இதற்கு ஒரு போதும் மரியாதை தர மாட்டார்கள். மூன்று வர்ணம் என்று கூறுவதே தீங்கானது. மூன்று வர்ணத்தை முன்னிறுத்துவது மோசமான மனநிலையை மக்களிடம் உருவாக்கும். மேலும் இதனால் நாட்டிற்கு கேடு உண்டாகும்“ என்று எழுதியது.
இது மட்டுமா? அவர்களது தத்துவக் கர்த்தா குருநாதர் கோல்வால்கர், அவரது ‘ஞானகங்கை’ (Bunch of the thoughts) புத்தகத்தில் என்ன கூறுகிறார்?
“நம்முடைய தலைவர்கள் நாட்டிற்கு புதிய கொடியை உருவாக்கியுள்ளார்கள். ஏன் அவ்வாறு செய்துள்ளார்கள்? நம்முடைய நாட்டிற்கு சொந்தமாகக் கொடி இல்லையா?
கடந்த ஆயிரக்கணக்ககான ஆண்டுகளாக நமது நாடு தேசிய சின்னம் இல்லாமலா இருந்தது? சந்தேகமில்லாமல் இவற்றை நாம் பெற்றிருந்தோம். இப்படி இருக்கையில் ஏன் இந்த முட்டாள்தனமான வேலையைச் செய்கின்றனர்?”
இப்போது இவாள் செய்வது...?
முன் இவர்கள் பதவி ஏற்றபோதுகூட இந்திய தேசியக் கொடியில் நடுவில் உள்ள ‘அசோக சக்கரத்தை’ அப்புறப்படுத்த வேண்டுமென்று அத்வானி போன்ற தலைவர்களேகூட கூற வில்லையா?
வசதியாக இவையெல்லாம் இப்போது “செலக்டிவ் அம்னீஷியா” நோய்க்கு ஆளாகி விட்டதா ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அமைப்புக்கு?
பாபாசாகேப் அம்பேத்கரை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் வாய்மையின்றி வசைமாரி பொழிந்தவர்கள் இன்று அம்பேத்கர் முகமூடியை அல்லவா அணிந்து அவனியில் பவனி வந்து அவரையும் அணைத்தே அழிக்க முயலுகின்றனர்!
அம்பேத்கரே சொன்னாராம் காவிக் கொடியே தேவை என்று! இப்படி ஒரு கொயெபெல்ஸை மிஞ்சும் புருடா இவர்களது ஏட்டில் பரப்பப்பட்டு வருகிறது.
அட திடீர் தேசபக்த திலகங்களே, கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் அய்யா!
- ஊசி மிளகாய்

Tuesday, March 1, 2016

அன்பிற்கும்கூட வேண்டும் அடைக்கும் கதவு!

‘அன்பிற்கும், உண்டோ அடைக் கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். வற்றாதது அன்பு என்பதை வலியுறுத் தவே அவ்வாறு ஆழமாகச் சொல்லி யிருக்கிறார் - வள்ளுவர் என்ற அரிய நம் சிந்தனையாளர். உண்மைதான்.
ஆனால், அந்த ‘அன்பே’கூட பற்பல நேரங்கள் வெளியில் கூற முடியாத - அன்பால் ஏற்படும் அவதி யாகக்கூட மாறி விடுகிறதே - நமது அன்றாட வாழ்க்கையில். இல்லையா?
நமது நண்பர்கள் - அன்பர்கள் பலர் நம்மீதுள்ள அன்பால் நம்மை சில சின்னச்சின்ன நெருக்கடிக்கும்கூட ஆளாக்கும்போது, ‘அய்யய்யோ இந்த அன்புக்கு சற்று நேரக் கதவடைப்பு செய்யக் கூடாதா?’ என்றுகூட தோன்றவே செய்கிறது!
வேகமாகச் சுழலும் அன்றாட வாழ்க்கையில், காலைப் பொழுதில் கடமையாற்றி நாம் அவசர அவசர மாக, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நமது நலம் விசாரிக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து, வந்தவர்கள் நிதானமாகப் பேசிக்  கொண்டிருக்கும்போது, நமது மனநிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இறுக்கத்தை அடைகிறது. அலுவலகப் பணிக்கு நேரமாகிக் கொண்டுள்ளது; வீட்டில் உள்ளோர் குடும்பக் கடமைகளில் அவசர அவசரமாக, பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புதல், மற்றவர்களுக்கு உணவுப் பரிமாற்றம் - இப்படி எத் தனையோ அவசரப் பணிகள்!
நலம் விசாரிக்க வந்தவர்களிடம் நாம் நம்முடைய அவசரத்தின் காரணமாக, நிதானமாகப் பேச முடியாதவாறு நிற்க வைத்தேகூட சில நேரங்களில் அவர் களிடம் பேசி, வேகமாக, அவர்களை அனுப்ப முயற்சித்தால், பற்பல நேரங்களில் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது!
நல்ல நட்புறவில்கூட ‘கீறல்’ விழுகிறது. நாம் வெளியே கிளம்பிக் கொண்டே இருப்போம்; அப்போது எங்கே போகி றோம் என்பதைக்கூட பகிரங்கப்படுத்த முடியாத நிலையும்கூட இருக்கும்; அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்ன நாம் அவரை வீடு தேடி ‘மெனக்கெட்டு’ போயிருக்கிறோம்; இந்த மனுஷன் நம்மை அலட்சியப்படுத்திவிட்டு இப்படி வெளியே கிளம்புகிறாரே என்று நம்மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்க முற்படுவார்களே தவிர, தவறு தங்கள்மீது உள்ளதே! நாம் என்ன அவரிடம் முன் கூட்டியே சொல்லியா வந்துள்ளோம்? தவறு நம்மீதுதானே என்று யோசிப்பதே கிடையாது!
ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான்!
எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களது வசதியை யும் அறிந்து சந்திப்பதே சாலச் சிறந்தது! இரண்டு சாராரையும் சங்கட நெருக்கடியி லிருந்து காப்பாற்றக் கூடியதும் ஆகும்!
அதுபோல உணவு பரிமாறிடும் போதுகூட அளவற்ற அதிக அன்பால் உணவு வகைகளைத் திணித்து அன்பால் கொல்ல முயற்சிக்கக் கூடாது.
சில பேருக்கு வெளியில் சொல்ல இயலாத உடல் உபாதைகளும் இருக்கலாம். அளவான உணவு எடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கு அறி வுரையும்கூட கூறியிருக்கலாம்; அதனால் அவர்கள் ‘மீதூண் விரும் பாத’வர்களாக இருப்பார்கள். அவர் களை நாம் அதிக உபசாரத்தினால் திணற அடிக்கிறோம் சிற்சில நேரங் களில் அப்போதெல்லாம் நம் மனம் கூறுவது இதுதான்; அன்பிற்கும் வேண்டும் அடைக்கும் கதவு - பற்பல நேரங்களில்.
அது மனித உறவுகளை சீராக வைத்திருக்க சிறப்பான உதவியாக அமையக் கூடும் - சரிதானே?
- கி.வீரமணி

Friday, February 19, 2016

மரணம் தோற்றது;மாமனிதம்வென்றது



நேற்றைய நாளிதழில் (‘தமிழ் இந்து’வில் -  18.2.2016) ஒரு செய்தி, படித்தவுடன் நம் இதயத்தைப் பிழிந்ததுடன் அதிரவும் செய்தது!

இப்படியும்கூட இளைஞர்கள் இருப் பதை விட நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஏன் மனித குலத்துக்கும் வேறு என்ன பெரிய பெருமை வேண்டும்? இதோ அச்செய்தி:
“பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உடல் 2 துண்டுகளான நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார் ஒரு இளைஞர். ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட இளைஞரின் கொடையுள்ளம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட் டத்தில் உள்ள குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன் தினம் குப்பியில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

நெலமங்களாவை அடுத்துள்ள திப்ப கொண்டனஹள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண் டிருந்தபோது, ஒரு லாரி அவரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது அந்த லாரி மோதியதில் ஹரிஷ் அதன் சக்கரத்தில் சிக்கினார். லாரி ஏறியதில் அவரது உடல் இரண்டு துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிருக்குப் போராடிய ஹரீஷை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது ஹரிஷ் கூறும்போது, நான் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள் என கைகளை கூப்பி, கதறி அழுதார். இதைக் கண்டவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போனதாக சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் ஹரிஷ் ஏற்றப்பட்டு, அடுத்த 8 நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உடல் இரு துண்டுகளாக ஆன நிலையிலும் அந்த இளைஞர், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேசியது மனதை நெகிழச் செய்தது என மருத்துவர்களும் காவலர்களும் தெரிவித்துள்ளனர்.”
தான் சாவது நிச்சயம் என்று அறிந்த நிலையில், எத்தகைய மனிதநேயத்தோடு அந்த 26 வயதே நிறைவடைந்த அந்த கிராமத்து இளைஞனின் கொடை யுள்ளத்திற்கும், திடமான பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட முடிவுக்கும் எளிதில் வேறு எடுத்துக்காட்டு கூற முடியுமா?
வழி தவறிய இளைஞர்களைப் பார்த்து இளைஞர் உலகமே சீர்கெட்டுப் போய் விடுகிறது என்று பொத்தாம் பொதுவில் பலரும் சலிப்புக்கு ஒலிகொடுக்கும் நிலையில், ஹரிஷ் போன்ற ஒப்பற்ற கொடையாளிகளின் மாமனிதம் மரணத்தை வென்றது; அச்சம், சுயநலத்தைக் கொன்றது.
மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் அவருக்கு நமது வீர வணக்கம்!

- கி.வீரமணி

Friday, October 18, 2013

அறிவு வெளிச்சமும் - நமது வீட்டுப் பிள்ளைகளும்!

நம்முடைய வீடுகளில் வெளிச்சம் இருப்பதற்காகவும், தூய காற்றோட்டம் இருப்பதற்காகவும்தான் ஜன்னல்கள் வைத்துக் கட்டப்படுகின்றன. அக்காலங்களில், ஜன்னல்களை உயரத்தில் சிறியதாக, சிறைக்கூட அறைகளில் பின்புறத்தில் மேல்பகுதியில் கொஞ்சம் வெளிச்சம் (காற்றோட்டமே பெரிதும் வர இயலாதபடி) கட்டி வைத்தனர் மனையடி சாஸ்திரம் பார்த்த நமது முன்னோர்கள் - உயரமான வாசற்கதவு நிலைகளும்கூட இருக்காது. நாலடி, நாலரை அடி அளவு வாசல்கால்கள் நிலைகள் இருக்கும்! நம் வீட்டிற்குப் புதிதாக வருபவர்களை வரவேற்கும்போதுகூட, நாம், குனிந்து வாருங்கள்; தலையில் இடித்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டேதான் வருவது வழக்கமாக இருந்தது!

இன்று அப்படி இல்லை. நல்ல வெளிச்சம், காற்றோட்டம் வரும் வகையில் ஏராளமான ஜன்னல்கள் வைத்தே கட்டப்படுவதுடன், அந்த ஜன்னல்கள் பெரிதாகவும், சுவர்கள் பகுதிகூட குறைந்து பெரிய ஜன்னல்கள் பகுதியே அதிகம் என்ற அளவில் வீடுகள் புது வகையில் உருவாக்கப்படுகின்றன! (வாஸ்து மூட நம்பிக்கை; இப்போதும் பலரைப் பாடாய் படுத்துகிறது).

எமது நண்பர் -  வழக்கறிஞர் பழனியப்பன் (காரைக்குடியில்) அவர்களது புராதன வீட்டுக்கு அவ்வட்டாரத்தில் பெயரே ஆயிரம் ஜன்னல் வீடு என்பதாகும்! அந்தக் காலத்தில் அவ்வட்டாரத்தில் அது ஓர் அதிசய வீடு ஆகும்!!

அப்படி ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம் சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில், நல்ல புத்தகங்களை வாங்கி, வீட்டில் வைத்து, குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் படித்து, விவாதித்து அறிவு பெறுவதும் மிகவும் இன்றியமையாத் தேவையாகும்! பல வீடுகளில் சாமி படங்களை ஏராளம் மாட்டுவதற்கு ஒரு புதிய காரணத்தை வருமான வரி, விற்பனை வரித் துறை அதிகாரிகள் கூறி, நேற்று ஏடுகளில் வந்துள்ளது; அதன் பின்னால்தான் கறுப்புப் பணத்தை - கணக்கில் வராத பணத்தை ஒளித்து வைத்திருக்கிறார்களாம்! என்ன விநோதம் பாருங்கள்!!

குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தாய்ப்பால் சத்துள்ள ஊட்டச்சத்துதான். அதனால் அந்தத் தாய் அறிவுள்ள தாயாக, படித்து தன் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் தாயாக அமைதல் அவசியமல்லவா?
நம் குழந்தைகளைப் புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு அதில் ஒரு ஆர்வத்தை ஊட்டுங்கள். நல்ல புத்தகங்களை - முதலில் நகைச்சுவைப் புத்தகங்களை - பீர்பால், முல்லா, தெனாலி இராமன் போன்ற கதை நூல்களைக் கொடுங்கள்; படிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் ஏற்படுத்துங்கள்.

பெற்றோர்களாகிய நாமும் (தாத்தா பாட்டிகளுக்கு இதைவிட முக்கிய வேலைதான் வேறு வேண்டுமோ?) அவர்களோடு அமர்ந்து அதில் சில பக்கங்களைப் படித்து, அதுபற்றி அவர்களது கருத்துரைகளைக் கேட்டு - விவாதித்து - ஒரு சுவையை ஏற்படுத்திட, ஊக்கப்படுத்துங்கள் - அவர்கள் சொன்னபடி செய்யுங்கள்.

பொது நூலகங்களுக்கும், நூல் விற்பனை நிலையங்களுக்கும் அழைத்துச் செல்ல ஒரு விடுமுறை நாளை குழந்தைகளுக்கென ஒதுக்கிவிடுங்கள்.

பொம்மைக் கடைகள் பிறகு; புத்தகக் கடைகள் முதலில் என்பதுபோல அவர்களைப் பழக்குங்கள்; கட்டாயப்படுத்தினால், காரியம் தோல்வியில் முடிந்துவிடும்; கவனமாக இருங்கள். புதுடில்லியிலிருந்துவரும் சம்பக் (Champak) (ஆங்கிலம்) சென்னையிலிருந்து வரும் பெரியார் பிஞ்சு ஏடுகளை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!

ஓடி விளையாடுதல் உடலுக்கு நல்லது.

தேடி புத்தகங்களைப் படிக்க வைப்பது அவர்களது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது!

சிறு வயதிலிருந்தே இப்படி புத்தகம் படிக்கும் பழக்கம் தொடங்கி - நம் குழந்தைகளைப் பழக்கிவிட்டால், அவர்கள் சாணை தீட்டப்பட்ட கூர்மையான ஆயுதங்களாக - அறிவு ஆயுதங்களாக - அவர்கள் வருங்காலத்தில் பளபளப்பர். பண்பாடு அடைவர்; பகுத்தறிவின் உச்சத்தை எட்டுவர்!

தின்பண்டங்கள் தேவைதான்; அதிலும் கெடுதி இல்லாதவை முக்கியம் என்பதுபோல், புத்தகங்கள் அவர்களது அறிவுக்கு உணவு. நல்ல ஊட்டச்சத்து அவர்களை வளர்க்கும் - வாழ்விக்கும் என்பது உறுதி! ஊக்கப்படுத்தி வளருங்கள்!!

புத்தக வெளிச்சம் அவர்களது அறியாமை இருளைப் போக்கட்டும்!


- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி


மகனுக்குத் தந்தை எழுதிய கவிதை!

பெற்றோர் - பிள்ளைகள் எப்படி வளர்ந்து, உலகின் தலைசிறந்தவர் களாவதைவிட, அவர்கள் சீரிய மனிதர்களாக ஆவதுதான் மிகவும் விரும்பத்தக்க ஒன்று என்பதை, பிரபல ஆங்கிலக் கவிஞர் ரட்யார்டு கிப்ளிங் (Rudyard Kipling) அவர்கள் எழுதிய ஓர் கவிதையின் மொழியாக்கம், கருத்தாக்கமாக இங்கே தரப்படுகிறது! (மகன் என்பது மகளுக்கும்தான் என்று நாம் புரிந்துகொள்வதே சாலச் சிறந்தது).

இந்தக் கவிதைக்கு அவரிட்ட தலைப்பு  if - இப்படியிருந்தால் என்பதாகும்!

மகனே, மற்றவர்கள் நம்பிக்கை இழந்து உன்னைக் குறை கூறும் நிலை ஏற்பட்டாலுங்கூட,
நீ தலைநிமிர்ந்தே நிற்கும் நிலையைக் கடைப்பிடி!

மற்றவர்கள் உன்னை சந்தேகக் கண்கொண்டு
பார்த்தால்கூட, ஆதங்கப்படாமல்
அதற்கும் ஒரு சலுகை காட்டு மகனே!

எப்போதும் காத்திருக்கும் நிலை என்றால்கூட,
அதையும் ஏற்க நீ பழகிவிடுவாயானால்
களைப்படையாமல் பொறுமை காட்டி,
அதனையும் ஏற்கும் குணம் உன்னிடத்தே
அமையுமானால், அல்லது
பிறரது பொய்யுரைகள் - அவச்சொற்கள் -
உன்னைத் துளைத்திடும் கொடுமைக்கு ஆளான போதிலும்கூட,
நீ பொய்யுரைகளை முதலாக்கி வாழாதே! அல்லது
உன்னை மற்றவர் வெறுக்கும் நிலை ஏற்பட்டாலுங்கூட
அதற்காக உன் வாழ்வில் வெறுப்பு நுழைய
உன் இதயக் கதவைத் திறக்காதே!

வாழும்போதுகூட மிக நல்லவனாக நீ உன்னைக் காட்டிக் கொள்ளாதே!

ரொம்ப புத்திசாலிபோல் பேசிட வேண்டும் என்று கூட எண்ணாதே!

நீ கனவு காண முயற்சிப்பதில் தவறில்லை
ஆனால், அந்தக் கனவு (விழைவு, விருப்பங்களை)
உனக்கு எஜமானனாகுவதை அனுமதிக்காதே!

நீ சீரிய சிந்தனையாளன் என்றாலும்கூட
அந்தச் சிந்தனைகளே உன்னை ஆட்டிப்படைக்கும்
அளவுக்கு அதற்கு அடிமையாகி விடாதே!

வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் நீ
சந்திக்கும் வாய்ப்புக்களைப் பெறும் நிலை ஏற்பட்டால்கூட
இரண்டையும் - இவைகள் அடிக்கடி மாறுபவைகளே
என்பதைப் புரிந்து, இரண்டு நிலைகளையும்
சமமாகவே பார்க்க, ஏற்க, பழகிக் கொள்!

உனது கருத்துகள், எண்ணங்களைக்கூட
திரித்துக் கூறும் அயோக்கியர்களின் செயலையும்,
அதை நம்பிடும் முட்டாள்கள் வெட்டும் குழிகளையும்கூட
மனமுடையாமல் சகித்துக் கொள்ளப் பழகிடுவாயானால்,
அந்த உடைந்த ஆயுதங்களை வைத்து, உன்னை அவர்கள்
வீழ்த்திட முடியாது என்ற தெளிவுடனும், உறுதியுடனும்
நிற்கவும் எப்போதும் பழகிக்கொள்!

அன்பு மகனே,

நீ கஷ்டப்பட்டு குவித்த ஏராளமான வெற்றிகளைக்கூட, சிற்சில நேரங்களில், திடீரென இழந்துவிடும் அபாயம் ஏற்படலாம். அப்போதுகூட,
மனந்தளராதே! வருந்தாதே!
இப்படி இழப்பு ஏற்பட்டுவிட்டதே என்று ஏக்கப் பெருமூச்சுகூட விடாதே!

முன் எப்படித் தொடங்கி உழைத்து வெற்றிகளைக் குவியலாக் கினாயோ அதே வேகத்தில் - உன் இதயத் துடிப்புகளையும், நரம்புகளையம் புடைக்கச் செய்து கிளம்பி,
மீண்டும் இழந்தவைகளை வென்றெடுத்து மீட்கும் வல்லமை என் வாழ்வில் எனக்கெப்போதும் உண்டு என்ற உறுதியின் உச்சத்தை தொடு மகனே,
இதன் பின், எச்சங்கள் தானே உனக்கு ஏகமாய்க்
குவியும் என்பது உறுதி!

இதற்குத் தேவை ஒன்றே ஒன்று; அதுதான் உன் நெஞ்சுறுதி!

நீ எவ்வளவு பெருங்கூட்டத் தோடு இருந்தாலும்
உனது தனித்தன்மையான நற்பண்பைக்
காத்துக் கொள்ளும் வல்லமையோடு வாழ்வாயாக!
அல்லது நீ நடைபோடுவது மிகப்பெரிய ராஜபாட்டையானாலும்
உன் அருகில் இருப்பவர் பல ராஜாக்கள்
என்ற நிலை வந்தபோதுகூட
உனது எளிமை உணர்வை இழந்து விடாதே!

இப்படி வாழ்ந்தால், உனது எதிரிகளோ,
உன்னுடன் உள்ள உனது (ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய) நண்பர்களோகூட
உன்னை வருத்தமுறச் செய்ய முடியாது!

மற்றவர்களோடு இணைத்து என்னை எண்ணுகிறார்களே
என்று நீ நினைத்தாலும்கூட, அதற்கும் அதி முக்கியத்துவம் தரவேண்டாமே!

மன்னிக்கப்படாத உனது காலத்தில், ஒரு 60 வினாடிகள்
ஓடிவந்த தூரம்போல எண்ணிக்கொள்!
எல்லாவற்றையும் இணைத்துப் பார்!
இந்தப் பூமியும் அதனுள் அடங்கிய அனைத்தையும்
நீ பெற்ற இன்பத்தை அடைவாய் மகனே,

இவை எல்லாவற்றையும்விட, மேலான ஒன்றை நீ அடையவேண்டும்
அதுதான் நான் மனிதன் ஆனேன்
என்பதைக் காட்டும் வண்ணம் உன் வாழ்க்கை அமைவது!

அதனினும் சாலச் சிறந்தது வேறு எதுவுமில்லை!

உனது அன்புத்தந்தை

- என்னே முத்தான, சத்தான, சொத்தான அறிவுரை, அறவுரை!
இளைஞர்களே! இவைகளை அசைபோட்டுச் சிந்தித்துச் செயல்படுங்கள்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி