Wikipedia

Search results

Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, March 1, 2016

அன்பிற்கும்கூட வேண்டும் அடைக்கும் கதவு!

‘அன்பிற்கும், உண்டோ அடைக் கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். வற்றாதது அன்பு என்பதை வலியுறுத் தவே அவ்வாறு ஆழமாகச் சொல்லி யிருக்கிறார் - வள்ளுவர் என்ற அரிய நம் சிந்தனையாளர். உண்மைதான்.
ஆனால், அந்த ‘அன்பே’கூட பற்பல நேரங்கள் வெளியில் கூற முடியாத - அன்பால் ஏற்படும் அவதி யாகக்கூட மாறி விடுகிறதே - நமது அன்றாட வாழ்க்கையில். இல்லையா?
நமது நண்பர்கள் - அன்பர்கள் பலர் நம்மீதுள்ள அன்பால் நம்மை சில சின்னச்சின்ன நெருக்கடிக்கும்கூட ஆளாக்கும்போது, ‘அய்யய்யோ இந்த அன்புக்கு சற்று நேரக் கதவடைப்பு செய்யக் கூடாதா?’ என்றுகூட தோன்றவே செய்கிறது!
வேகமாகச் சுழலும் அன்றாட வாழ்க்கையில், காலைப் பொழுதில் கடமையாற்றி நாம் அவசர அவசர மாக, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நமது நலம் விசாரிக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து, வந்தவர்கள் நிதானமாகப் பேசிக்  கொண்டிருக்கும்போது, நமது மனநிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இறுக்கத்தை அடைகிறது. அலுவலகப் பணிக்கு நேரமாகிக் கொண்டுள்ளது; வீட்டில் உள்ளோர் குடும்பக் கடமைகளில் அவசர அவசரமாக, பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புதல், மற்றவர்களுக்கு உணவுப் பரிமாற்றம் - இப்படி எத் தனையோ அவசரப் பணிகள்!
நலம் விசாரிக்க வந்தவர்களிடம் நாம் நம்முடைய அவசரத்தின் காரணமாக, நிதானமாகப் பேச முடியாதவாறு நிற்க வைத்தேகூட சில நேரங்களில் அவர் களிடம் பேசி, வேகமாக, அவர்களை அனுப்ப முயற்சித்தால், பற்பல நேரங்களில் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது!
நல்ல நட்புறவில்கூட ‘கீறல்’ விழுகிறது. நாம் வெளியே கிளம்பிக் கொண்டே இருப்போம்; அப்போது எங்கே போகி றோம் என்பதைக்கூட பகிரங்கப்படுத்த முடியாத நிலையும்கூட இருக்கும்; அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்ன நாம் அவரை வீடு தேடி ‘மெனக்கெட்டு’ போயிருக்கிறோம்; இந்த மனுஷன் நம்மை அலட்சியப்படுத்திவிட்டு இப்படி வெளியே கிளம்புகிறாரே என்று நம்மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்க முற்படுவார்களே தவிர, தவறு தங்கள்மீது உள்ளதே! நாம் என்ன அவரிடம் முன் கூட்டியே சொல்லியா வந்துள்ளோம்? தவறு நம்மீதுதானே என்று யோசிப்பதே கிடையாது!
ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான்!
எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களது வசதியை யும் அறிந்து சந்திப்பதே சாலச் சிறந்தது! இரண்டு சாராரையும் சங்கட நெருக்கடியி லிருந்து காப்பாற்றக் கூடியதும் ஆகும்!
அதுபோல உணவு பரிமாறிடும் போதுகூட அளவற்ற அதிக அன்பால் உணவு வகைகளைத் திணித்து அன்பால் கொல்ல முயற்சிக்கக் கூடாது.
சில பேருக்கு வெளியில் சொல்ல இயலாத உடல் உபாதைகளும் இருக்கலாம். அளவான உணவு எடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கு அறி வுரையும்கூட கூறியிருக்கலாம்; அதனால் அவர்கள் ‘மீதூண் விரும் பாத’வர்களாக இருப்பார்கள். அவர் களை நாம் அதிக உபசாரத்தினால் திணற அடிக்கிறோம் சிற்சில நேரங் களில் அப்போதெல்லாம் நம் மனம் கூறுவது இதுதான்; அன்பிற்கும் வேண்டும் அடைக்கும் கதவு - பற்பல நேரங்களில்.
அது மனித உறவுகளை சீராக வைத்திருக்க சிறப்பான உதவியாக அமையக் கூடும் - சரிதானே?
- கி.வீரமணி

Friday, October 18, 2013

அறிவு வெளிச்சமும் - நமது வீட்டுப் பிள்ளைகளும்!

நம்முடைய வீடுகளில் வெளிச்சம் இருப்பதற்காகவும், தூய காற்றோட்டம் இருப்பதற்காகவும்தான் ஜன்னல்கள் வைத்துக் கட்டப்படுகின்றன. அக்காலங்களில், ஜன்னல்களை உயரத்தில் சிறியதாக, சிறைக்கூட அறைகளில் பின்புறத்தில் மேல்பகுதியில் கொஞ்சம் வெளிச்சம் (காற்றோட்டமே பெரிதும் வர இயலாதபடி) கட்டி வைத்தனர் மனையடி சாஸ்திரம் பார்த்த நமது முன்னோர்கள் - உயரமான வாசற்கதவு நிலைகளும்கூட இருக்காது. நாலடி, நாலரை அடி அளவு வாசல்கால்கள் நிலைகள் இருக்கும்! நம் வீட்டிற்குப் புதிதாக வருபவர்களை வரவேற்கும்போதுகூட, நாம், குனிந்து வாருங்கள்; தலையில் இடித்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டேதான் வருவது வழக்கமாக இருந்தது!

இன்று அப்படி இல்லை. நல்ல வெளிச்சம், காற்றோட்டம் வரும் வகையில் ஏராளமான ஜன்னல்கள் வைத்தே கட்டப்படுவதுடன், அந்த ஜன்னல்கள் பெரிதாகவும், சுவர்கள் பகுதிகூட குறைந்து பெரிய ஜன்னல்கள் பகுதியே அதிகம் என்ற அளவில் வீடுகள் புது வகையில் உருவாக்கப்படுகின்றன! (வாஸ்து மூட நம்பிக்கை; இப்போதும் பலரைப் பாடாய் படுத்துகிறது).

எமது நண்பர் -  வழக்கறிஞர் பழனியப்பன் (காரைக்குடியில்) அவர்களது புராதன வீட்டுக்கு அவ்வட்டாரத்தில் பெயரே ஆயிரம் ஜன்னல் வீடு என்பதாகும்! அந்தக் காலத்தில் அவ்வட்டாரத்தில் அது ஓர் அதிசய வீடு ஆகும்!!

அப்படி ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம் சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில், நல்ல புத்தகங்களை வாங்கி, வீட்டில் வைத்து, குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் படித்து, விவாதித்து அறிவு பெறுவதும் மிகவும் இன்றியமையாத் தேவையாகும்! பல வீடுகளில் சாமி படங்களை ஏராளம் மாட்டுவதற்கு ஒரு புதிய காரணத்தை வருமான வரி, விற்பனை வரித் துறை அதிகாரிகள் கூறி, நேற்று ஏடுகளில் வந்துள்ளது; அதன் பின்னால்தான் கறுப்புப் பணத்தை - கணக்கில் வராத பணத்தை ஒளித்து வைத்திருக்கிறார்களாம்! என்ன விநோதம் பாருங்கள்!!

குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தாய்ப்பால் சத்துள்ள ஊட்டச்சத்துதான். அதனால் அந்தத் தாய் அறிவுள்ள தாயாக, படித்து தன் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் தாயாக அமைதல் அவசியமல்லவா?
நம் குழந்தைகளைப் புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு அதில் ஒரு ஆர்வத்தை ஊட்டுங்கள். நல்ல புத்தகங்களை - முதலில் நகைச்சுவைப் புத்தகங்களை - பீர்பால், முல்லா, தெனாலி இராமன் போன்ற கதை நூல்களைக் கொடுங்கள்; படிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் ஏற்படுத்துங்கள்.

பெற்றோர்களாகிய நாமும் (தாத்தா பாட்டிகளுக்கு இதைவிட முக்கிய வேலைதான் வேறு வேண்டுமோ?) அவர்களோடு அமர்ந்து அதில் சில பக்கங்களைப் படித்து, அதுபற்றி அவர்களது கருத்துரைகளைக் கேட்டு - விவாதித்து - ஒரு சுவையை ஏற்படுத்திட, ஊக்கப்படுத்துங்கள் - அவர்கள் சொன்னபடி செய்யுங்கள்.

பொது நூலகங்களுக்கும், நூல் விற்பனை நிலையங்களுக்கும் அழைத்துச் செல்ல ஒரு விடுமுறை நாளை குழந்தைகளுக்கென ஒதுக்கிவிடுங்கள்.

பொம்மைக் கடைகள் பிறகு; புத்தகக் கடைகள் முதலில் என்பதுபோல அவர்களைப் பழக்குங்கள்; கட்டாயப்படுத்தினால், காரியம் தோல்வியில் முடிந்துவிடும்; கவனமாக இருங்கள். புதுடில்லியிலிருந்துவரும் சம்பக் (Champak) (ஆங்கிலம்) சென்னையிலிருந்து வரும் பெரியார் பிஞ்சு ஏடுகளை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!

ஓடி விளையாடுதல் உடலுக்கு நல்லது.

தேடி புத்தகங்களைப் படிக்க வைப்பது அவர்களது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது!

சிறு வயதிலிருந்தே இப்படி புத்தகம் படிக்கும் பழக்கம் தொடங்கி - நம் குழந்தைகளைப் பழக்கிவிட்டால், அவர்கள் சாணை தீட்டப்பட்ட கூர்மையான ஆயுதங்களாக - அறிவு ஆயுதங்களாக - அவர்கள் வருங்காலத்தில் பளபளப்பர். பண்பாடு அடைவர்; பகுத்தறிவின் உச்சத்தை எட்டுவர்!

தின்பண்டங்கள் தேவைதான்; அதிலும் கெடுதி இல்லாதவை முக்கியம் என்பதுபோல், புத்தகங்கள் அவர்களது அறிவுக்கு உணவு. நல்ல ஊட்டச்சத்து அவர்களை வளர்க்கும் - வாழ்விக்கும் என்பது உறுதி! ஊக்கப்படுத்தி வளருங்கள்!!

புத்தக வெளிச்சம் அவர்களது அறியாமை இருளைப் போக்கட்டும்!


- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி


மகனுக்குத் தந்தை எழுதிய கவிதை!

பெற்றோர் - பிள்ளைகள் எப்படி வளர்ந்து, உலகின் தலைசிறந்தவர் களாவதைவிட, அவர்கள் சீரிய மனிதர்களாக ஆவதுதான் மிகவும் விரும்பத்தக்க ஒன்று என்பதை, பிரபல ஆங்கிலக் கவிஞர் ரட்யார்டு கிப்ளிங் (Rudyard Kipling) அவர்கள் எழுதிய ஓர் கவிதையின் மொழியாக்கம், கருத்தாக்கமாக இங்கே தரப்படுகிறது! (மகன் என்பது மகளுக்கும்தான் என்று நாம் புரிந்துகொள்வதே சாலச் சிறந்தது).

இந்தக் கவிதைக்கு அவரிட்ட தலைப்பு  if - இப்படியிருந்தால் என்பதாகும்!

மகனே, மற்றவர்கள் நம்பிக்கை இழந்து உன்னைக் குறை கூறும் நிலை ஏற்பட்டாலுங்கூட,
நீ தலைநிமிர்ந்தே நிற்கும் நிலையைக் கடைப்பிடி!

மற்றவர்கள் உன்னை சந்தேகக் கண்கொண்டு
பார்த்தால்கூட, ஆதங்கப்படாமல்
அதற்கும் ஒரு சலுகை காட்டு மகனே!

எப்போதும் காத்திருக்கும் நிலை என்றால்கூட,
அதையும் ஏற்க நீ பழகிவிடுவாயானால்
களைப்படையாமல் பொறுமை காட்டி,
அதனையும் ஏற்கும் குணம் உன்னிடத்தே
அமையுமானால், அல்லது
பிறரது பொய்யுரைகள் - அவச்சொற்கள் -
உன்னைத் துளைத்திடும் கொடுமைக்கு ஆளான போதிலும்கூட,
நீ பொய்யுரைகளை முதலாக்கி வாழாதே! அல்லது
உன்னை மற்றவர் வெறுக்கும் நிலை ஏற்பட்டாலுங்கூட
அதற்காக உன் வாழ்வில் வெறுப்பு நுழைய
உன் இதயக் கதவைத் திறக்காதே!

வாழும்போதுகூட மிக நல்லவனாக நீ உன்னைக் காட்டிக் கொள்ளாதே!

ரொம்ப புத்திசாலிபோல் பேசிட வேண்டும் என்று கூட எண்ணாதே!

நீ கனவு காண முயற்சிப்பதில் தவறில்லை
ஆனால், அந்தக் கனவு (விழைவு, விருப்பங்களை)
உனக்கு எஜமானனாகுவதை அனுமதிக்காதே!

நீ சீரிய சிந்தனையாளன் என்றாலும்கூட
அந்தச் சிந்தனைகளே உன்னை ஆட்டிப்படைக்கும்
அளவுக்கு அதற்கு அடிமையாகி விடாதே!

வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் நீ
சந்திக்கும் வாய்ப்புக்களைப் பெறும் நிலை ஏற்பட்டால்கூட
இரண்டையும் - இவைகள் அடிக்கடி மாறுபவைகளே
என்பதைப் புரிந்து, இரண்டு நிலைகளையும்
சமமாகவே பார்க்க, ஏற்க, பழகிக் கொள்!

உனது கருத்துகள், எண்ணங்களைக்கூட
திரித்துக் கூறும் அயோக்கியர்களின் செயலையும்,
அதை நம்பிடும் முட்டாள்கள் வெட்டும் குழிகளையும்கூட
மனமுடையாமல் சகித்துக் கொள்ளப் பழகிடுவாயானால்,
அந்த உடைந்த ஆயுதங்களை வைத்து, உன்னை அவர்கள்
வீழ்த்திட முடியாது என்ற தெளிவுடனும், உறுதியுடனும்
நிற்கவும் எப்போதும் பழகிக்கொள்!

அன்பு மகனே,

நீ கஷ்டப்பட்டு குவித்த ஏராளமான வெற்றிகளைக்கூட, சிற்சில நேரங்களில், திடீரென இழந்துவிடும் அபாயம் ஏற்படலாம். அப்போதுகூட,
மனந்தளராதே! வருந்தாதே!
இப்படி இழப்பு ஏற்பட்டுவிட்டதே என்று ஏக்கப் பெருமூச்சுகூட விடாதே!

முன் எப்படித் தொடங்கி உழைத்து வெற்றிகளைக் குவியலாக் கினாயோ அதே வேகத்தில் - உன் இதயத் துடிப்புகளையும், நரம்புகளையம் புடைக்கச் செய்து கிளம்பி,
மீண்டும் இழந்தவைகளை வென்றெடுத்து மீட்கும் வல்லமை என் வாழ்வில் எனக்கெப்போதும் உண்டு என்ற உறுதியின் உச்சத்தை தொடு மகனே,
இதன் பின், எச்சங்கள் தானே உனக்கு ஏகமாய்க்
குவியும் என்பது உறுதி!

இதற்குத் தேவை ஒன்றே ஒன்று; அதுதான் உன் நெஞ்சுறுதி!

நீ எவ்வளவு பெருங்கூட்டத் தோடு இருந்தாலும்
உனது தனித்தன்மையான நற்பண்பைக்
காத்துக் கொள்ளும் வல்லமையோடு வாழ்வாயாக!
அல்லது நீ நடைபோடுவது மிகப்பெரிய ராஜபாட்டையானாலும்
உன் அருகில் இருப்பவர் பல ராஜாக்கள்
என்ற நிலை வந்தபோதுகூட
உனது எளிமை உணர்வை இழந்து விடாதே!

இப்படி வாழ்ந்தால், உனது எதிரிகளோ,
உன்னுடன் உள்ள உனது (ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய) நண்பர்களோகூட
உன்னை வருத்தமுறச் செய்ய முடியாது!

மற்றவர்களோடு இணைத்து என்னை எண்ணுகிறார்களே
என்று நீ நினைத்தாலும்கூட, அதற்கும் அதி முக்கியத்துவம் தரவேண்டாமே!

மன்னிக்கப்படாத உனது காலத்தில், ஒரு 60 வினாடிகள்
ஓடிவந்த தூரம்போல எண்ணிக்கொள்!
எல்லாவற்றையும் இணைத்துப் பார்!
இந்தப் பூமியும் அதனுள் அடங்கிய அனைத்தையும்
நீ பெற்ற இன்பத்தை அடைவாய் மகனே,

இவை எல்லாவற்றையும்விட, மேலான ஒன்றை நீ அடையவேண்டும்
அதுதான் நான் மனிதன் ஆனேன்
என்பதைக் காட்டும் வண்ணம் உன் வாழ்க்கை அமைவது!

அதனினும் சாலச் சிறந்தது வேறு எதுவுமில்லை!

உனது அன்புத்தந்தை

- என்னே முத்தான, சத்தான, சொத்தான அறிவுரை, அறவுரை!
இளைஞர்களே! இவைகளை அசைபோட்டுச் சிந்தித்துச் செயல்படுங்கள்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி