Wikipedia

Search results

Thursday, March 17, 2016

டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் தமிழகத்திற்கு வருகின்றன


டில்லியில் மனுதர்மத்தை எரித்த மாணவ சிங்கங்கள் மாநாட்டுக்குவருகின்றன
 
இரண்டே நாட்கள் தான் இடையில் -  உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

புரட்சிப் பூபாளம் பாடுவோம் - வாரீர், வாரீர்!!

தமிழர் தலைவரின் அன்பழைப்பு

 

பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் - திராவிடர் கழகம் - இருக்காது என்று ஆரூடம் கணித்த ஆலமரத்தடி ஜோசிய ருடன் அவாளின் அமைப்புகளும், இன்று பெரும் பதற்றத்தில் துடிக்கின்றன - நெருப்பில் காலை வைத்தவன் நிலைபோல!

காரணம் தந்தை பெரியார் என்ற தத்துவம். அய்யா உடலால் மறைந்து 43 ஆண்டுகளுக்குப்பின் பேருருவாய் (விஸ்வரூபம்)  இந்தியாவின் பல மாநிலங்களிலும், இளைய தலைமுறையினரின் பாசறையான பல்கலைக் கழகங்களிலும் தோன்றி, ஆரிய வர்ணாசிரமத்தின் நச்சுப் பல்லை அகற்றிட நாடு தழுவிய உணர்வாளர்களாக உள்ளார்கள்!

மாணவ சிங்கக்குட்டிகளால்
எரிக்கப்பட்டது மனுதர்மம்

மனுதர்ம சாஸ்திரம் என்ற ஜாதிக்கான மூலத்தை அவர்கள் நெருப்பில் போட்டுப் பொசுக்குகிறார்கள். பெரியாரும், - அம்பேத்கரும் செய்தவை, வரலாறு திரும்பும் என்பதற்கு எடுத்துக்காட்டாக டில்லி - மற்ற வட மாநிலப் பல்கலைக் கழக மாணவப் புரட்சியாளர்களால் சுட்டெரிக்கப்படுகிறது!

பெரியாரின் லட்சியப் பயணம் “சுய அபிமான்” என்ற ஹிந்திச் சொற்களில் சுயமரியாதை பயணம் செய்கிறது.

தோழர்களே உங்கள் முகம் தெரிய வேண்டாமா?

அந்த மாணவச் சிங்கக் குட்டிகள் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகத்தில் - நமது மாநாடுகளுக்கு வந்து, கொள்கை முழக்கங்களை எழுப்ப உற்சாகத்துடன் கிளம்பி வருகின்றனர்.  அவர்களே பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கொள்கை முழக்கமும், சுயமரியாதைச் சூளுரையும் எடுக்கும் பாசறையாக பெரியார் உலக மாநாடுகளை எண்ணும்போது,
என்னருந்தோழர்காள்,

எம் அரும் கொள்கைக் குடும்ப உறுப்பினர்களே! நீங்கள் வீட்டிலா இருக்கப் போகின்றீர்கள்? லட்சோப லட்சமாய் திரளும் கருஞ்சட்டை வீரர்களில் உங்கள் முகம் தெரிய வேண்டாமா? உங்கள் பங்களிப்பு மிளிர வேண்டாமா?

1.12.1959 புரட்சிக் கவிஞரின் ‘குயில்’ ஏட்டில் ‘கேட்டலும் கிளத்தலும்‘ என்ற பகுதியில் இதோ ஓர் செய்தி. அப்படியே தருகிறோம்.
திராவிடர் கழகம் செயலற்றுப் போகுமா?
- புரட்சிக் கவிஞர் பதில்

கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று........................................................................... எண்ணுகிறார்.  உங்கள் கருத்தென்ன?
சித்தானந்தம், முக்தியால்பேட்டை.

கிளத்தல்: ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. தி.க. அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்துக்கள் இயற்கையோடியைந்தவை. தி.க அழிவது என்பது இந்த ஊழியில் இல்லை.

புரட்சிக் கவிஞர் பொருள் மிகுந்த விடையின் ஆழம் என்ன? அகலம் என்ன? நீளம் என்ன - புரிய வேண்டுமா?
உடனே புறப்படுங்கள் - தாமதியாமல் திருச்சி - சிறுகனூர் பெரியார் உலக  மாநாடுகளுக்கு

ஜெர்மன் பேராசிரியரும் வருகிறார்

ஜெர்மன் நாட்டிலிருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் பெரியார் பற்றாளர் பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ்  மாநாட்டில் பங்கேற்கிறார். (இவர்தான் 2016 ஜூலையில் பெரியார் பன்னாட்டு பகுத்தறிவாளர்கள் மாநாட்டை ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடத்திடத் திட்டமிட்ட ஆய்வுப் பேராசிரியர் ஆவார்!)

‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’
என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிக்கான
இலக்கியம் அல்லவா இம்முயற்சி, அது மட்டுமா?

ஏப்ரல் 9அன்று பீகார் முதல் அமைச்சருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது!

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் அமெரிக்கப் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருக்கு “சமூக நீதிக்கான வீரமணி விருது” வழங்கும் பெரு விழா - கொள்கை நிகழ்வாக டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சோம இளங்கோவன் ஆகிய இயக்குநர்களால் நடத்தப்பட உள்ளது.

ஆலமரம் மட்டுமல்ல, தழைத்த விழுதுகளும் பலமாகி உலக அளவில் உயர்ந்து நிற்கிறது என்பது எதைக் காட்டுகிறது?
ஊழி உள்ளவரை தி.க.வை அழிக்க முடியாது என்பதைத் தானே!
பெரியார் இயக்க வெற்றிக்கு என்றும் உரமிடுபவர்கள் அதன் கொள்கை எதிரிகள்தானே!

தனித்தும் பலம் வாய்ந்த அமைப்பு! எதிர்ப்பாலும் வலிமை மிக்கது இவ்வமைப்பு - அதைக் காண வேண்டுமா?

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் 10.3.1945 ‘குடிஅரசு’ ஏட்டில் எழுப்பிய பொறிதட்டிய கேள்வி இதோ: சிந்தியுங்கள்.

“இந்த பல ஆயிரம் வருஷங்களில் - கீழ் ஜாதியாய்ப் பிறந்து, மேல் ஜாதியாய் செத்த மனிதன் (ஹிந்து மதத்தில்) ஒருவன்கூட கிடையாது.

ஜாதியே இல்லாமல் பிறந்து ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை; வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்ற அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ, “சாமியாய், ரிஷியாய், மன்னனாய், மகாத்மாவாய்” செத்து இருக்கலாம்.

ஆனால் ‘பறையனாய்ப்’ பிறந்து ‘பிராமணனாய்’ செத்தவரோ, ‘பிராமணனாய்’ பிறந்து ‘பறையனாய்’ செத்தவனோ என்றும்‘ இல்லை.” (‘குடிஅரசு’ 1945)

இன்னும் இரண்டே நாட்கள்தான்

மாநாடு நாளை மறுநாள் இன்னும் இரண்டே நாட்கள்தான் இடைவெளி!
வந்து பாருங்கள்!

புதியதோர் புரட்சியின் பூபாளம் அங்கே பாடப்பட்டு, வீறு நடை போட்ட வீரர்கள் கோட்டமாக அதன் செயல்பாடு  பொங்குமாங் கடலெனப் பொங்கி வழியும் காட்சியைக் காண வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

கி.வீரமணி   
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
17.3.2016

Sunday, March 6, 2016

இதுதான் “பார-தீய - (ஜனதா - ஆர்.எஸ்.எஸ்.) கலாச்சாரம் - புரிந்து கொள்வீர்!

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குக் கருத்தாளர் களை - பெரியார் - அம்பேத்கர் - காரல் மார்க்ஸ் சிந்தனை வயப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்களை அறவே அழித்து விரட்டிட, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP (ஏ.பி.வி.பி.) என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் திட்டமிட்டே ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் - மாணவர் தலைவர் கன்னையாகுமார், பேராசிரியர் கிலானி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
அடக்கு முறைகளால் லட்சியவாதிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், மாறாக, எரியும் நெருப்புக்கு எண்ணெய் - அதுவும் பெட்ரோல் ஊற்றியதுபோல மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர் இந்த ‘கோயபெல்ஸ்சின் குருநாதர்கள்’!
1. வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதக் குழு கன்னையாகுமாரை வாழ்த்தியதாக பொய்க் குற்றச்சாட்டு உடனடியாக கிழிந்து தொங்கியது; அந்த இணையதளமே தன்னுடையதல்ல - போலி என்று பதில் வந்தது.
2. போடப்பட்ட தேச விரோத முழக்கங்கள் Super Imposed on that video என்று ஆய்வில் நிருபிக்கப்பட்டு விட்டது.
செய்தியாளரும் முன்பே அது தன்னால் கொடுக்கப் பட்டதல்ல, திட்டமிட்டே சேர்க்கப்பட்டது என்று கூறி விட்டார்!
உள்துறை அமைச்சர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பலரும் இதற்குப் பொறுப்பேற்று சீரிய ஜனநாயக மரபு காக்க என்ன செய்திருக்க வேண்டும்? தாங்களே முன் வந்து பதவிகளை விட்டு விலகி இருக்க வேண்டாமா? - சொரணையிருந்தால்!
பா.ஜ.க.வின் பாரதீய கலாச்சார தூதுவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கன்னையாகுமார் நாக்கைஅறுத்தால் ரூ.5 லட்சம்“
“கன்னையாகுமார் தலையை வெட்டினால் ரூ.11 லட்சம்“
- இது என்ன ஜனநாயக நாடா? காட்டு மிராண்டிகள், காபாலிகர்கள் ஆளுமையின்கீழ் நடக்கும் காட்டு நிர்வாகமா?
இது எந்த, யாருடைய தைரியத்தில் நடை பெறுகிறது?
இவர்கள்  குண்டர் தடுப்பு சட்டம், தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்குள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
இதற்கு முன், ஆட்டுக்கறி சாப்பிட்டவரை, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று  அக்லக் என்ற முஸ்லிம் உ.பி.யில் கொல்லப்பட்டுள்ளதும், பலவிடங்களில் வன்முறை - ஒடுக்கப்பட்டோரை செருப்புக்கும், நாய்களுக்கும் ஒப்பிட்ட அமைச்சர்கள் எவ்வித பதவிப் பறிப்புக்கும் ஆளாகாமல் பவனி வந்து ராஜ்ய பாரம் நடத் துவது தான் - மோடி  கொடுத்த வளர்ச்சியா? முன்னேற்றமா? மாற்றமா? மக்கள் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் தொடங்கி பல காவல்துறை தலைவர்கள், நிர்வாகிகள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் நேற்றுகூட ஒரு கண்டன அறிக்கை- இந்த சட்டம் செயல்படாதுள்ள அவலத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனரோ!
இந்த கலாச்சாரம் பரவினால் மீண்டும் காட்டுத் தர்பார் (Jungle Raj) ஆட்சிக்குத்தானே செல்லும் சிந்தியுங்கள்.
- ஊசி மிளகாய்

Friday, March 4, 2016

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வகையறாக்கள் “செலக்டிவ் அம்னீஷியா”

மக்கள் மறதியே தமது பொது வாழ்வின் பொய்யுரைகளுக்கு அடிக்கட்டுமானம் என்று கருதி ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் அவரது ‘ஆத்மார்த்த’ சீடகோடிகளாகி அரசியல் பதவிகளை அனுபவிப்பவர்களான பா.ஜ.க.வுக்கும், திடீர் தேச பக்தி பீறிட்டுக் கிளம்பி பெரும் பிரவாகமாய் ஓடத் தொடங்கி விட்டது!
எங்கெங்கு காணினும் தேச பக்தி! மத்திய பல்கலைக் கழகங்களில் எத்தனை அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்ற தாக்கீது!
ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, டி. இராஜா முதலிய பல்வேறு கட்சியினரையும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர், மாணவர் கன்னையாகுமார் போன்ற பலர்மீதும் தேசத் துரோக (Anti - National) குற்றச்சாட்டு - 124A  செக்ஷனின் பிரயோகம்!
இவர்களது  பூர்வ சரித்திரம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்ற போலி நினைப்பு.
‘நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது’ என்று பாட்டிகள் கூறும் கிராமிய அனுபவ மொழி!
இந்தியாவின் தேசியக் கொடியாக  மூவர்ணக் கொடியை ஏற்க மறுத்தவர்கள் - மறுப்பவர்கள் இன்றும் அவர்கள் தலைமையகத்தில் (நாகபுரி) காவிக் கொடி, பாரத் மாதா கொடியை ஏற்றும் நபர்கள்.
ஹிட்லரின் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் இவர்தம் முந்தைய அடையாளம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடு (ஆங்கிலம்) ‘ஆர்கனைசர்’ அதன் மூன்றாவது இதழில் (17.7.1948ல்) “இந்தியாவின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியை ஏற்க முடியாதென்றும், காவிக் கொடியைத்தான் “தேசியக் கொடியாக” அறிவிக்க வேண்டும்“ என்றும் எழுதியது!
அது மட்டுமா?
“இந்தியாவை ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதையும் ஏற்க முடியாது. இந்தியா ஒரு இந்துத்துவா நாடு. செங்கோட் டையில் காவிக் கொடியைத் தான் பறக்க விட வேண்டும்’’ என்று ஆகஸ்டு 14, 1947 ஆர்கனைசர் ஏடு எழுதியது - மறந்து போய் விட்டதா? அல்லது மறைக்கப்படுகிறதா?
“இந்திய மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்த வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள் ளது. ஆனால் ஹிந்து மக்கள் இதற்கு ஒரு போதும் மரியாதை தர மாட்டார்கள். மூன்று வர்ணம் என்று கூறுவதே தீங்கானது. மூன்று வர்ணத்தை முன்னிறுத்துவது மோசமான மனநிலையை மக்களிடம் உருவாக்கும். மேலும் இதனால் நாட்டிற்கு கேடு உண்டாகும்“ என்று எழுதியது.
இது மட்டுமா? அவர்களது தத்துவக் கர்த்தா குருநாதர் கோல்வால்கர், அவரது ‘ஞானகங்கை’ (Bunch of the thoughts) புத்தகத்தில் என்ன கூறுகிறார்?
“நம்முடைய தலைவர்கள் நாட்டிற்கு புதிய கொடியை உருவாக்கியுள்ளார்கள். ஏன் அவ்வாறு செய்துள்ளார்கள்? நம்முடைய நாட்டிற்கு சொந்தமாகக் கொடி இல்லையா?
கடந்த ஆயிரக்கணக்ககான ஆண்டுகளாக நமது நாடு தேசிய சின்னம் இல்லாமலா இருந்தது? சந்தேகமில்லாமல் இவற்றை நாம் பெற்றிருந்தோம். இப்படி இருக்கையில் ஏன் இந்த முட்டாள்தனமான வேலையைச் செய்கின்றனர்?”
இப்போது இவாள் செய்வது...?
முன் இவர்கள் பதவி ஏற்றபோதுகூட இந்திய தேசியக் கொடியில் நடுவில் உள்ள ‘அசோக சக்கரத்தை’ அப்புறப்படுத்த வேண்டுமென்று அத்வானி போன்ற தலைவர்களேகூட கூற வில்லையா?
வசதியாக இவையெல்லாம் இப்போது “செலக்டிவ் அம்னீஷியா” நோய்க்கு ஆளாகி விட்டதா ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அமைப்புக்கு?
பாபாசாகேப் அம்பேத்கரை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் வாய்மையின்றி வசைமாரி பொழிந்தவர்கள் இன்று அம்பேத்கர் முகமூடியை அல்லவா அணிந்து அவனியில் பவனி வந்து அவரையும் அணைத்தே அழிக்க முயலுகின்றனர்!
அம்பேத்கரே சொன்னாராம் காவிக் கொடியே தேவை என்று! இப்படி ஒரு கொயெபெல்ஸை மிஞ்சும் புருடா இவர்களது ஏட்டில் பரப்பப்பட்டு வருகிறது.
அட திடீர் தேசபக்த திலகங்களே, கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் அய்யா!
- ஊசி மிளகாய்

Tuesday, March 1, 2016

அன்பிற்கும்கூட வேண்டும் அடைக்கும் கதவு!

‘அன்பிற்கும், உண்டோ அடைக் கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர். வற்றாதது அன்பு என்பதை வலியுறுத் தவே அவ்வாறு ஆழமாகச் சொல்லி யிருக்கிறார் - வள்ளுவர் என்ற அரிய நம் சிந்தனையாளர். உண்மைதான்.
ஆனால், அந்த ‘அன்பே’கூட பற்பல நேரங்கள் வெளியில் கூற முடியாத - அன்பால் ஏற்படும் அவதி யாகக்கூட மாறி விடுகிறதே - நமது அன்றாட வாழ்க்கையில். இல்லையா?
நமது நண்பர்கள் - அன்பர்கள் பலர் நம்மீதுள்ள அன்பால் நம்மை சில சின்னச்சின்ன நெருக்கடிக்கும்கூட ஆளாக்கும்போது, ‘அய்யய்யோ இந்த அன்புக்கு சற்று நேரக் கதவடைப்பு செய்யக் கூடாதா?’ என்றுகூட தோன்றவே செய்கிறது!
வேகமாகச் சுழலும் அன்றாட வாழ்க்கையில், காலைப் பொழுதில் கடமையாற்றி நாம் அவசர அவசர மாக, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நமது நலம் விசாரிக்க அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து, வந்தவர்கள் நிதானமாகப் பேசிக்  கொண்டிருக்கும்போது, நமது மனநிலை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இறுக்கத்தை அடைகிறது. அலுவலகப் பணிக்கு நேரமாகிக் கொண்டுள்ளது; வீட்டில் உள்ளோர் குடும்பக் கடமைகளில் அவசர அவசரமாக, பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்புதல், மற்றவர்களுக்கு உணவுப் பரிமாற்றம் - இப்படி எத் தனையோ அவசரப் பணிகள்!
நலம் விசாரிக்க வந்தவர்களிடம் நாம் நம்முடைய அவசரத்தின் காரணமாக, நிதானமாகப் பேச முடியாதவாறு நிற்க வைத்தேகூட சில நேரங்களில் அவர் களிடம் பேசி, வேகமாக, அவர்களை அனுப்ப முயற்சித்தால், பற்பல நேரங்களில் வந்தவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது!
நல்ல நட்புறவில்கூட ‘கீறல்’ விழுகிறது. நாம் வெளியே கிளம்பிக் கொண்டே இருப்போம்; அப்போது எங்கே போகி றோம் என்பதைக்கூட பகிரங்கப்படுத்த முடியாத நிலையும்கூட இருக்கும்; அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் என்ன நாம் அவரை வீடு தேடி ‘மெனக்கெட்டு’ போயிருக்கிறோம்; இந்த மனுஷன் நம்மை அலட்சியப்படுத்திவிட்டு இப்படி வெளியே கிளம்புகிறாரே என்று நம்மீதுதான் குற்றப் பத்திரிக்கை வாசிக்க முற்படுவார்களே தவிர, தவறு தங்கள்மீது உள்ளதே! நாம் என்ன அவரிடம் முன் கூட்டியே சொல்லியா வந்துள்ளோம்? தவறு நம்மீதுதானே என்று யோசிப்பதே கிடையாது!
ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான்!
எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் கொஞ்சம் முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களது வசதியை யும் அறிந்து சந்திப்பதே சாலச் சிறந்தது! இரண்டு சாராரையும் சங்கட நெருக்கடியி லிருந்து காப்பாற்றக் கூடியதும் ஆகும்!
அதுபோல உணவு பரிமாறிடும் போதுகூட அளவற்ற அதிக அன்பால் உணவு வகைகளைத் திணித்து அன்பால் கொல்ல முயற்சிக்கக் கூடாது.
சில பேருக்கு வெளியில் சொல்ல இயலாத உடல் உபாதைகளும் இருக்கலாம். அளவான உணவு எடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கு அறி வுரையும்கூட கூறியிருக்கலாம்; அதனால் அவர்கள் ‘மீதூண் விரும் பாத’வர்களாக இருப்பார்கள். அவர் களை நாம் அதிக உபசாரத்தினால் திணற அடிக்கிறோம் சிற்சில நேரங் களில் அப்போதெல்லாம் நம் மனம் கூறுவது இதுதான்; அன்பிற்கும் வேண்டும் அடைக்கும் கதவு - பற்பல நேரங்களில்.
அது மனித உறவுகளை சீராக வைத்திருக்க சிறப்பான உதவியாக அமையக் கூடும் - சரிதானே?
- கி.வீரமணி

Friday, February 19, 2016

மரணம் தோற்றது;மாமனிதம்வென்றது



நேற்றைய நாளிதழில் (‘தமிழ் இந்து’வில் -  18.2.2016) ஒரு செய்தி, படித்தவுடன் நம் இதயத்தைப் பிழிந்ததுடன் அதிரவும் செய்தது!

இப்படியும்கூட இளைஞர்கள் இருப் பதை விட நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஏன் மனித குலத்துக்கும் வேறு என்ன பெரிய பெருமை வேண்டும்? இதோ அச்செய்தி:
“பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உடல் 2 துண்டுகளான நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார் ஒரு இளைஞர். ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட இளைஞரின் கொடையுள்ளம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட் டத்தில் உள்ள குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன் தினம் குப்பியில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

நெலமங்களாவை அடுத்துள்ள திப்ப கொண்டனஹள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண் டிருந்தபோது, ஒரு லாரி அவரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது அந்த லாரி மோதியதில் ஹரிஷ் அதன் சக்கரத்தில் சிக்கினார். லாரி ஏறியதில் அவரது உடல் இரண்டு துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிருக்குப் போராடிய ஹரீஷை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது ஹரிஷ் கூறும்போது, நான் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள் என கைகளை கூப்பி, கதறி அழுதார். இதைக் கண்டவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போனதாக சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் ஹரிஷ் ஏற்றப்பட்டு, அடுத்த 8 நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஷ் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உடல் இரு துண்டுகளாக ஆன நிலையிலும் அந்த இளைஞர், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேசியது மனதை நெகிழச் செய்தது என மருத்துவர்களும் காவலர்களும் தெரிவித்துள்ளனர்.”
தான் சாவது நிச்சயம் என்று அறிந்த நிலையில், எத்தகைய மனிதநேயத்தோடு அந்த 26 வயதே நிறைவடைந்த அந்த கிராமத்து இளைஞனின் கொடை யுள்ளத்திற்கும், திடமான பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட முடிவுக்கும் எளிதில் வேறு எடுத்துக்காட்டு கூற முடியுமா?
வழி தவறிய இளைஞர்களைப் பார்த்து இளைஞர் உலகமே சீர்கெட்டுப் போய் விடுகிறது என்று பொத்தாம் பொதுவில் பலரும் சலிப்புக்கு ஒலிகொடுக்கும் நிலையில், ஹரிஷ் போன்ற ஒப்பற்ற கொடையாளிகளின் மாமனிதம் மரணத்தை வென்றது; அச்சம், சுயநலத்தைக் கொன்றது.
மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் அவருக்கு நமது வீர வணக்கம்!

- கி.வீரமணி

Friday, October 18, 2013

அறிவு வெளிச்சமும் - நமது வீட்டுப் பிள்ளைகளும்!

நம்முடைய வீடுகளில் வெளிச்சம் இருப்பதற்காகவும், தூய காற்றோட்டம் இருப்பதற்காகவும்தான் ஜன்னல்கள் வைத்துக் கட்டப்படுகின்றன. அக்காலங்களில், ஜன்னல்களை உயரத்தில் சிறியதாக, சிறைக்கூட அறைகளில் பின்புறத்தில் மேல்பகுதியில் கொஞ்சம் வெளிச்சம் (காற்றோட்டமே பெரிதும் வர இயலாதபடி) கட்டி வைத்தனர் மனையடி சாஸ்திரம் பார்த்த நமது முன்னோர்கள் - உயரமான வாசற்கதவு நிலைகளும்கூட இருக்காது. நாலடி, நாலரை அடி அளவு வாசல்கால்கள் நிலைகள் இருக்கும்! நம் வீட்டிற்குப் புதிதாக வருபவர்களை வரவேற்கும்போதுகூட, நாம், குனிந்து வாருங்கள்; தலையில் இடித்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டேதான் வருவது வழக்கமாக இருந்தது!

இன்று அப்படி இல்லை. நல்ல வெளிச்சம், காற்றோட்டம் வரும் வகையில் ஏராளமான ஜன்னல்கள் வைத்தே கட்டப்படுவதுடன், அந்த ஜன்னல்கள் பெரிதாகவும், சுவர்கள் பகுதிகூட குறைந்து பெரிய ஜன்னல்கள் பகுதியே அதிகம் என்ற அளவில் வீடுகள் புது வகையில் உருவாக்கப்படுகின்றன! (வாஸ்து மூட நம்பிக்கை; இப்போதும் பலரைப் பாடாய் படுத்துகிறது).

எமது நண்பர் -  வழக்கறிஞர் பழனியப்பன் (காரைக்குடியில்) அவர்களது புராதன வீட்டுக்கு அவ்வட்டாரத்தில் பெயரே ஆயிரம் ஜன்னல் வீடு என்பதாகும்! அந்தக் காலத்தில் அவ்வட்டாரத்தில் அது ஓர் அதிசய வீடு ஆகும்!!

அப்படி ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும், காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம் சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில், நல்ல புத்தகங்களை வாங்கி, வீட்டில் வைத்து, குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் படித்து, விவாதித்து அறிவு பெறுவதும் மிகவும் இன்றியமையாத் தேவையாகும்! பல வீடுகளில் சாமி படங்களை ஏராளம் மாட்டுவதற்கு ஒரு புதிய காரணத்தை வருமான வரி, விற்பனை வரித் துறை அதிகாரிகள் கூறி, நேற்று ஏடுகளில் வந்துள்ளது; அதன் பின்னால்தான் கறுப்புப் பணத்தை - கணக்கில் வராத பணத்தை ஒளித்து வைத்திருக்கிறார்களாம்! என்ன விநோதம் பாருங்கள்!!

குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்குத் தாய்ப்பால் சத்துள்ள ஊட்டச்சத்துதான். அதனால் அந்தத் தாய் அறிவுள்ள தாயாக, படித்து தன் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளும் தாயாக அமைதல் அவசியமல்லவா?
நம் குழந்தைகளைப் புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு அதில் ஒரு ஆர்வத்தை ஊட்டுங்கள். நல்ல புத்தகங்களை - முதலில் நகைச்சுவைப் புத்தகங்களை - பீர்பால், முல்லா, தெனாலி இராமன் போன்ற கதை நூல்களைக் கொடுங்கள்; படிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் ஏற்படுத்துங்கள்.

பெற்றோர்களாகிய நாமும் (தாத்தா பாட்டிகளுக்கு இதைவிட முக்கிய வேலைதான் வேறு வேண்டுமோ?) அவர்களோடு அமர்ந்து அதில் சில பக்கங்களைப் படித்து, அதுபற்றி அவர்களது கருத்துரைகளைக் கேட்டு - விவாதித்து - ஒரு சுவையை ஏற்படுத்திட, ஊக்கப்படுத்துங்கள் - அவர்கள் சொன்னபடி செய்யுங்கள்.

பொது நூலகங்களுக்கும், நூல் விற்பனை நிலையங்களுக்கும் அழைத்துச் செல்ல ஒரு விடுமுறை நாளை குழந்தைகளுக்கென ஒதுக்கிவிடுங்கள்.

பொம்மைக் கடைகள் பிறகு; புத்தகக் கடைகள் முதலில் என்பதுபோல அவர்களைப் பழக்குங்கள்; கட்டாயப்படுத்தினால், காரியம் தோல்வியில் முடிந்துவிடும்; கவனமாக இருங்கள். புதுடில்லியிலிருந்துவரும் சம்பக் (Champak) (ஆங்கிலம்) சென்னையிலிருந்து வரும் பெரியார் பிஞ்சு ஏடுகளை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!

ஓடி விளையாடுதல் உடலுக்கு நல்லது.

தேடி புத்தகங்களைப் படிக்க வைப்பது அவர்களது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது!

சிறு வயதிலிருந்தே இப்படி புத்தகம் படிக்கும் பழக்கம் தொடங்கி - நம் குழந்தைகளைப் பழக்கிவிட்டால், அவர்கள் சாணை தீட்டப்பட்ட கூர்மையான ஆயுதங்களாக - அறிவு ஆயுதங்களாக - அவர்கள் வருங்காலத்தில் பளபளப்பர். பண்பாடு அடைவர்; பகுத்தறிவின் உச்சத்தை எட்டுவர்!

தின்பண்டங்கள் தேவைதான்; அதிலும் கெடுதி இல்லாதவை முக்கியம் என்பதுபோல், புத்தகங்கள் அவர்களது அறிவுக்கு உணவு. நல்ல ஊட்டச்சத்து அவர்களை வளர்க்கும் - வாழ்விக்கும் என்பது உறுதி! ஊக்கப்படுத்தி வளருங்கள்!!

புத்தக வெளிச்சம் அவர்களது அறியாமை இருளைப் போக்கட்டும்!


- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி


மகனுக்குத் தந்தை எழுதிய கவிதை!

பெற்றோர் - பிள்ளைகள் எப்படி வளர்ந்து, உலகின் தலைசிறந்தவர் களாவதைவிட, அவர்கள் சீரிய மனிதர்களாக ஆவதுதான் மிகவும் விரும்பத்தக்க ஒன்று என்பதை, பிரபல ஆங்கிலக் கவிஞர் ரட்யார்டு கிப்ளிங் (Rudyard Kipling) அவர்கள் எழுதிய ஓர் கவிதையின் மொழியாக்கம், கருத்தாக்கமாக இங்கே தரப்படுகிறது! (மகன் என்பது மகளுக்கும்தான் என்று நாம் புரிந்துகொள்வதே சாலச் சிறந்தது).

இந்தக் கவிதைக்கு அவரிட்ட தலைப்பு  if - இப்படியிருந்தால் என்பதாகும்!

மகனே, மற்றவர்கள் நம்பிக்கை இழந்து உன்னைக் குறை கூறும் நிலை ஏற்பட்டாலுங்கூட,
நீ தலைநிமிர்ந்தே நிற்கும் நிலையைக் கடைப்பிடி!

மற்றவர்கள் உன்னை சந்தேகக் கண்கொண்டு
பார்த்தால்கூட, ஆதங்கப்படாமல்
அதற்கும் ஒரு சலுகை காட்டு மகனே!

எப்போதும் காத்திருக்கும் நிலை என்றால்கூட,
அதையும் ஏற்க நீ பழகிவிடுவாயானால்
களைப்படையாமல் பொறுமை காட்டி,
அதனையும் ஏற்கும் குணம் உன்னிடத்தே
அமையுமானால், அல்லது
பிறரது பொய்யுரைகள் - அவச்சொற்கள் -
உன்னைத் துளைத்திடும் கொடுமைக்கு ஆளான போதிலும்கூட,
நீ பொய்யுரைகளை முதலாக்கி வாழாதே! அல்லது
உன்னை மற்றவர் வெறுக்கும் நிலை ஏற்பட்டாலுங்கூட
அதற்காக உன் வாழ்வில் வெறுப்பு நுழைய
உன் இதயக் கதவைத் திறக்காதே!

வாழும்போதுகூட மிக நல்லவனாக நீ உன்னைக் காட்டிக் கொள்ளாதே!

ரொம்ப புத்திசாலிபோல் பேசிட வேண்டும் என்று கூட எண்ணாதே!

நீ கனவு காண முயற்சிப்பதில் தவறில்லை
ஆனால், அந்தக் கனவு (விழைவு, விருப்பங்களை)
உனக்கு எஜமானனாகுவதை அனுமதிக்காதே!

நீ சீரிய சிந்தனையாளன் என்றாலும்கூட
அந்தச் சிந்தனைகளே உன்னை ஆட்டிப்படைக்கும்
அளவுக்கு அதற்கு அடிமையாகி விடாதே!

வெற்றிகளையும் வீழ்ச்சிகளையும் நீ
சந்திக்கும் வாய்ப்புக்களைப் பெறும் நிலை ஏற்பட்டால்கூட
இரண்டையும் - இவைகள் அடிக்கடி மாறுபவைகளே
என்பதைப் புரிந்து, இரண்டு நிலைகளையும்
சமமாகவே பார்க்க, ஏற்க, பழகிக் கொள்!

உனது கருத்துகள், எண்ணங்களைக்கூட
திரித்துக் கூறும் அயோக்கியர்களின் செயலையும்,
அதை நம்பிடும் முட்டாள்கள் வெட்டும் குழிகளையும்கூட
மனமுடையாமல் சகித்துக் கொள்ளப் பழகிடுவாயானால்,
அந்த உடைந்த ஆயுதங்களை வைத்து, உன்னை அவர்கள்
வீழ்த்திட முடியாது என்ற தெளிவுடனும், உறுதியுடனும்
நிற்கவும் எப்போதும் பழகிக்கொள்!

அன்பு மகனே,

நீ கஷ்டப்பட்டு குவித்த ஏராளமான வெற்றிகளைக்கூட, சிற்சில நேரங்களில், திடீரென இழந்துவிடும் அபாயம் ஏற்படலாம். அப்போதுகூட,
மனந்தளராதே! வருந்தாதே!
இப்படி இழப்பு ஏற்பட்டுவிட்டதே என்று ஏக்கப் பெருமூச்சுகூட விடாதே!

முன் எப்படித் தொடங்கி உழைத்து வெற்றிகளைக் குவியலாக் கினாயோ அதே வேகத்தில் - உன் இதயத் துடிப்புகளையும், நரம்புகளையம் புடைக்கச் செய்து கிளம்பி,
மீண்டும் இழந்தவைகளை வென்றெடுத்து மீட்கும் வல்லமை என் வாழ்வில் எனக்கெப்போதும் உண்டு என்ற உறுதியின் உச்சத்தை தொடு மகனே,
இதன் பின், எச்சங்கள் தானே உனக்கு ஏகமாய்க்
குவியும் என்பது உறுதி!

இதற்குத் தேவை ஒன்றே ஒன்று; அதுதான் உன் நெஞ்சுறுதி!

நீ எவ்வளவு பெருங்கூட்டத் தோடு இருந்தாலும்
உனது தனித்தன்மையான நற்பண்பைக்
காத்துக் கொள்ளும் வல்லமையோடு வாழ்வாயாக!
அல்லது நீ நடைபோடுவது மிகப்பெரிய ராஜபாட்டையானாலும்
உன் அருகில் இருப்பவர் பல ராஜாக்கள்
என்ற நிலை வந்தபோதுகூட
உனது எளிமை உணர்வை இழந்து விடாதே!

இப்படி வாழ்ந்தால், உனது எதிரிகளோ,
உன்னுடன் உள்ள உனது (ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய) நண்பர்களோகூட
உன்னை வருத்தமுறச் செய்ய முடியாது!

மற்றவர்களோடு இணைத்து என்னை எண்ணுகிறார்களே
என்று நீ நினைத்தாலும்கூட, அதற்கும் அதி முக்கியத்துவம் தரவேண்டாமே!

மன்னிக்கப்படாத உனது காலத்தில், ஒரு 60 வினாடிகள்
ஓடிவந்த தூரம்போல எண்ணிக்கொள்!
எல்லாவற்றையும் இணைத்துப் பார்!
இந்தப் பூமியும் அதனுள் அடங்கிய அனைத்தையும்
நீ பெற்ற இன்பத்தை அடைவாய் மகனே,

இவை எல்லாவற்றையும்விட, மேலான ஒன்றை நீ அடையவேண்டும்
அதுதான் நான் மனிதன் ஆனேன்
என்பதைக் காட்டும் வண்ணம் உன் வாழ்க்கை அமைவது!

அதனினும் சாலச் சிறந்தது வேறு எதுவுமில்லை!

உனது அன்புத்தந்தை

- என்னே முத்தான, சத்தான, சொத்தான அறிவுரை, அறவுரை!
இளைஞர்களே! இவைகளை அசைபோட்டுச் சிந்தித்துச் செயல்படுங்கள்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Friday, September 27, 2013

மதிய தூக்கம் மழலையர் கற்றல் திறனை மேம்படுத்தும்!

மூன்று வயதுமுதல் அய்ந்து வயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வா ளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மதிய சாப்பாட்டிற்குப் பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
மூன்று முதல் அய்ந்துவயது வரையிலான குழந் தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின் விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எட்டப்பட்டிருக்கிறது.
இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு  அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
குழந்தைகளின் நினைவாற்றலை நிலைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும், ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியமாகிறது என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால் பார்த்து அதன்மூலம் கற்றவற்றை நினைவுகூர்வதில் சிறப்பாக செயற்பட்டதாகவும், மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் மேம்பட்டு இருந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம் தூங்க விடாதபோது அவர்களின் கற்றல் திறன் குறைவதையும் தாங்கள் கண்டறிந்ததாக ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
இந்த பரிசோதனையில் பங்கேற்ற 14 குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் மூளையின் கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக செயற்படுவதையும் இந்த ஆய்வாளர்கள் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர்.
தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை தாங்கள் மருத்துவ முறையில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரிபெக்கா ஸ்பென்ஸர்.
குழந்தைகளுக்கு வயதாக ஆக, இந்த மதியநேர தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல் போகும் என்று கூறும் அவர், மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மதியநேர குட்டித்தூக்கம் மனிதர்களின் மூளைத்திறனை, விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும் என்பது ஏற்கெனவே ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட செய்தி என்றாலும், மழலையர் பள்ளி மாணாக்கர்களிடமும் இது நல்லபலனைத்தரும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்திருப்பதாக கூறுகிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.
மழலை வயதில் குழந்தைகள், இயற்கையாகவே தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை உள்வாங்கி பகுத்துப்பார்த்து சேமித்து வைத்துக்கொள் வதற்கு சராசரியாக ஒருநாளைக்கு 11 முதல் 13 மணிநேரம் அவர்கள் தூங்குவது அவசியம்.
எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக கருதுகிறார் மருத்துவர் ராபர்ட்.
மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும், எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
தங்களின் குழந்தையின் மழலைக்கற்றலை ஊக்கு விக்க நினைக்கும் பெற்றோர்கள், அவர்களை மதிய நேரம் குறைந்தது ஒருமணிநேரமாவது தூங்கவிடுங்கள் என்பதே இந்த மருத்துவர்கள் செய்யும் பரிந்துரை.

நிறுவனங்கள் விரும்பும் படிப்பு எது?

எந்தத் துறை வேலை வாய்ப்பென்றாலும், அது நிர்வாகத் துறை வாய்ப்புகளே என்றாலும் இன்று சர்வசாதாரணமாக இன்ஜினியரிங் பட்டதாரிகள் கடும் போட்டியை ஏற்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப் படுவது பிற சாதாரண பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் தான்.
இன்ஜினியரிங் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க நினைப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகின் றனர். ஆனாலும் சமீபத்திய சர்வே ஒன்று இன்ஜினீயரிங் பட்டமேற்படிப்பு முடித்திருப்பவர்களுக்கு சாதக மான சூழல் இல்லை என்றே கூறுகிறது.
பெரிய நிறு வனங்கள் எல்லாமே இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு முடித்திருப் பவர்களே போதும் என்று நினைப்பதாக இந்த சர்வே கூறுகிறது. எம்.இ., எம்.டெக்., படித்திருப் பவர்களை விட பி.இ., பி.டெக்., படித்திருப்பவர்கள் வளைந்து கொடுப்ப வர்களாக இருப்பதுதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்றும் சர்வே கருதுகிறது.
இன்ஜினீயரிங் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர் களிடம் பட்டதாரிகளை விட பெரிதும் எதிர்பார்க்க முடிவதில்லை என்றும் கொஞ்சம் கூடுதலாக இவர்கள் நிதானமாக செயல்படுபவர்களாக இருப்பது ஒன்று தான் இவர்களின் பிளஸ் என்றும் நிறுவனங்கள் கருது கின்றனவாம்.
எம்.டெக்., போன்ற படிப்புகளை முடித்திருப்பவர்கள் ஆய்வு தொடர்பான வேலைகளையே விரும்புவதும் இவர்களை நிறுவனங்கள் புறக்கணிப்பதான் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. தற்போதைய சூழலில் 10 பி.இ., பி.டெக்.,குகளுக்கு மத்தியில் ஒரேயொரு பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர் மட்டுமே பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்.
பட்ட மேற்படிப்பு முடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் மட்டுமே கேம்பஸ் மூலமாக பணிக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றனர். வாரங்கலில் உள்ள என்.அய்.டி.,யில் 720 பி.டெக்., மாணவர்களில் 80 சதவீதத்தினருக்கும் மேலாக பணி வாய்ப்பைப் பெற்றனர்.
ஆனால் இதே கல்வி நிறுவனத்தில் 500 பட்ட மேற்படிப்பு மாணவர்களில் 150 பேர் மட்டுமே பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த காரணத் தினால் சமீப காலமாக பல கல்வி நிறுவனங்கள் இரட்டை இன்ஜினீயரிங் படிப்புகளை அறிமுகப்படுத்தி யுள்ளன. இவற்றுக்கு அதிக வரவேற்பும் பணி வாய்ப்பும் உள்ளது.

ஏர்போர்ட்ஸ் அதாரிடி பணி வாய்ப்பு

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விதத்தில் அவற்றின் செயல்பாடுகளை முன்னேற்றுவதற்காக ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 100 ஜூனியர் அசிஸ்டன்ட் - பயர் சர்வீஸஸ் காலி இடங்களுக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
15.10.2013 அன்று 30-க்குள் இருக்க வேண்டும்.  10ஆம் வகுப்பு முடித்துவிட்டு மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் 3 ஆண்டு முழு நேர டிப்ளமோ படிப்பை 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூ படிப்பை 50 சதவிகித மதிப்பெண் களுடன் முழு நேரப் படிப்பாக முடித்தவர்களும் விண்ணப்பிக் கலாம். இவற்றுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் தேவை.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் மெஷர்மெண்ட், டிரைவிங் டெஸ்ட், எண்டியூரன்ஸ் டெஸ்ட் மற்றும் நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் :   Airports Authority of India என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக ரூ.400/-க்கான டி.டி. மற்றும் முழுமையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப் பங்களை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: : The Regional Executive Director, Airports Authority of India, Northern Region, Operational Office, Rangpuri, Gurgaon Road, New Delhi - 110037
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 15.10.2013
முழு விபரங்களறிய உதவும் இணையதள தொடர்பு முகவரி: www.airportsindia.org.in/ employment_news/Advertisement_fire.pdf

பெல் நிறுவனத்தில் ஆர்டிசன் வேலை

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரி கல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவன மாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அய்தராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் - 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37 வயது : 01.09.2013 அன்று 27 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதிகள் : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு என்.ஏ.சி., என்.டி.சி., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தெலுங்கு மொழி தெரிந்தால் நல்லது.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.125/- Power Jyoti Account No.32838381735 என்ற அக்கவுண்ட் எண்ணில் Bharat Heavy Electricals Limited, Ramachandrapuram, Hyderabad  என்ற பெயரில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தை ஆன்-லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 05.10.2013 முழுமையான விவரங்களை இணைய தளம் வழியாக அறிய : http://recruit1.bhelhyd.co.in/

இலங்கைப் போர்க் குற்றவாளிகளை மார்ச் மாதத்துக்குள் தண்டிக்க வேண்டும்: நவநீதம்பிள்ளை அறிக்கை

கொழும்பு, செப். 26-இலங்கை இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். தமிழர்கள் படுகொலையை தடுக்க எந்த உலக நாடும் முன் வராத நிலையில் அய்.நா. சபை இதில் காலதாமத மாக உண்மையை உணர்ந்து கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையம் மட்டும் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அய்.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம் பிள்ளை போரில் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு பகுதிக்குச் சென்று நேரில் விசாரணை நடத் தினார்.
அப்போது அவர் கண்டதை யும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் மூலம் வாய்வழி அறிக்கையாக அய்.நா. மனித உரி மைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதில் கூறி இருப்பதாவது: போரின் போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், ராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை.
நம்பகத் தன்மை இல்ல
குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராணுவமும், கடற்படையும் நடத் தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை. போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறை யில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் தனி யாக விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது.
விடுதலைப்புலிகள் தொடர்பு டைய போர் குற்றங்கள் முறை யாக விசாரிக்கப்பட வேண்டும் சம்பந்தப்பட்டோர் மீதான வழக் குகள் விரைவுபடுத்தப்பட வேண் டும். திருகோணமலை கடற்கரை யில் 5 மாணவர்கள் கொல்லப் பட்ட வழக்கு ஏ.சி.எப் நிறுவனத் தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப் பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற் றில் முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளது என நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் ராணுவமும் சென்றது குறிப்பிட்ட நவநீதம் பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் இது இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக் குக் கொண்டுவரப்பட்டது என் றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும்.
இராணுவ நடவடிக்கை கவலை அளிக்கிறது
இலங்கையில் சட்டத்தின் ஆட் சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப் படுவது மற்றும் அருகிப்போவது ஆழ்ந்த கவலை அளிக் கிறது. 17 ஆவது சட்ட திருத் தத்தை மீண்டும் கொண்டு வருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப் பட வேண்டும் வட மாகாணத் தேர்தல் நடைபெற் றதை வரவேற்கிறோம் 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று அதிபர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்பு கிறோம்.
போர் முடிந்து நான்கு ஆண்டு களான பிறகும் அங்கு காணப்படும் ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.
தனியாக வசிக்கும் பெண்கள், சிறுமிகள்மீது ராணுவத்தின் பாலியல் அத்து மீறல்கள்   கவலை அளிப்பதாக உள்ளது. பாலியல்  அத்து மீறல்களை அரசு சிறிதும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தனியார் நிலங்களை ராணுவத் தேவைகளுக் காக கட்டாயமாக கையகப்படுத்தப்படுகிறது. வட மாகாணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நட வடிக்கைகளிலும், கல்வி, விவசாயம், சுற் றுலா போன்ற துறை களிலும் ராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவ தாகவும் அவர் தெரிவித்துள் ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விஷயங்களில் இருந்து ராணு வத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள் ளுமாறு அரசிடம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள் ளார்.
கற்றறிந்த பாடங்கள் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளில் கூடு தலாக 53 பரிந்துரைகளை அமல் படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டுகிறோம்.
காணாமல் போனோர்பற்றி....
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும், கிழக்கிலும் காணா மல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந் தாலும், போருக்குப் பிறகு கொழும் பிலும் நாட்டின் இதர பகுதி களிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவுபடுத்த வேண் டும் காணாமல்போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணை யங்களால் பயனேதும் ஏற்பட வில்லை.
காணாமல் போனோர் தொடர் பிலான விசாரணைகளை துரிதப் படுத்த அய்.நா. நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நம்புகிறேன்.
நவநீதம் பிள்ளையின் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று அய்.நா.வுக்கான இலங்கை அரசின் பிரதிநிதி ரவிநாத் தெரிவித்துள்ளார். அய்.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் அவர் பேசுகையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோர அவருக்கு அதிகாரம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.

Friday, June 14, 2013

ரிசர்வ் வங்கி பணிவாய்ப்பு

இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறு வனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ்வங்கி எனப்படும் ஆர்.பி.அய்., திகழ்கிறது. மத்திய நிதிய மைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் மட்டுமே கிளைகள் உள் ளன. இந்த கிளைகளில் உள்ள 525 உதவி யாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தக் காலி இடங் களுக்கு அரசு நிபந்தனைகளின் படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
காலி இட விபரங்கள்: ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களான ஆமதாபாத்தில் 25ம், பெங்களூருவில் 31ம், போபாலில் 25ம், புவனேஸ்வர் மற்றும் சண்டிகாரில் தலா 20ம், சென்னையில் 35ம், கவுகாத்தியில் 25ம், அய்தராபாத்தில் 23ம், ஜெய்பூரில் 17ம், ஜம்முவில் 16ம், கான்பூர் மற்றும் லக்னோவில் 25ம், கோல்கட்டாவில் 50ம், மும்பையில் 131ம், நாக்பூரில் 15ம், புது டில்லியில் 28ம், பாட்னா வில் 24ம் மற்றும் திருவனந்தபுரம்/கொச்சி யில் 15ம் உதவியாளர் காலி இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட உதவியாளர் காலி இடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பி யவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித் திருக்க வேண்டும்.
இத்துடன் கணினியில் வேர்டு பிராசசிங் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண் டும். எந்த மாநிலத்திலுள்ள காலி இடங் களுக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநில ஆட்சி மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-அய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இடங்கள் ஆன்-லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறை யிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.06.2013
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்: 20.07.2013,21.07.2013,27.07.2013,28.07.2013

Tuesday, June 11, 2013

உண்மையான நாவன்மை எது?

நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.
மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.
நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம்.  எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:
நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.
இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.
என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.
எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்!  இல்லையா?
அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!
அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.
நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!
தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!
காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!
சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!
எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!
நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்
என்ற  கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!
நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!
எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.
அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?
எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!
- கி.வீரமணி


Monday, June 10, 2013

நச்சுணவு ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் கோழி பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். உணவு நச்சுணவாக மாற என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் நஞ்சுத் தன்மை ஏற்படும்?
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி:
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால் தான் நச்சுணவு (ஃபுட் பாய்சன்) ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்சினை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த கோழி இறைச்சித் துண்டோ கெட்டுப் போயிருக்கலாம்.
இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்ட தால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு நச்சுணவு அதிகம் ஏற்படுகிறது.
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவ வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக் காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள், அரிசி, பருப்பு போன்ற சமையலறைக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள். பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குளிர்பதனப் பெட்டிக்குள் தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும்.
சமையலறைப் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்ததால் அவற்றை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடா.
அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. காலாவதியான பொருள்களைப் பயன்படுத்தினாலும் நச்சுணவாக மாறும் வாய்ப்பு ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள்; எண்ணெயில் இருந்து கெட்டுப் போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப் போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
குளிர்பதனப் பெட்டியில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்த வரை நொறுக்குத் தீனிகளை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது. கோழி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக் கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள்.

Sunday, June 2, 2013

இங்கிலாந்து நாட்டின் முதல் பிரதமர் யார்?

சர் ஹென்றி காம்பல் பானர்மேன் என்பவர்தான் இங்கிலாந்து நாட்டின் முதல் பிரதமராவர். அவர் 1905 இல் பதவியேற்றதற்கு அய்ந்து நாட்கள் கழிந்த பிறகுதான் பிரதமர் என்ற சொற்றொடர் அதிகார பூர்வமாகப் பயன் படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறு கூறுவது இழிவுபடுத்துவதாக இருந்ததாகும்.
முதல் அதிகார பூர்வ பிரதமர் என்று பொதுவாக அங்கீரிக்கப்பட்ட சர் ராபர்ட் வால்போல் இந்தப் பெயரை எப்போதுமே பயன்படுத்தவில்லை. அவரும் அவருக்குப் பின்னர் வந்தவர்களும் கருவூலத்தின் முதல் பிரபுக்கள் என்றுதான் தங்களை அழைத்துக் கொண்டனர்.  1905 டிசம்பர் 10 வரை காம்பல் பானர்மேனும் அவ்வாறுதான் தன்னை அழைத்துக் கொண்டார். முதன் முதலாக இப்பெயரை அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட அரசு ஆணையில் யார்க் ஆர்ச் பிஷப்புக்கு அடுத்த அதிகார நிலையில் பிரதமர் வைக்கப்பட்டார்.
சர் ஹென்றி கேம்பல் பானர்மேன் (1836-1908) ஹென்றி கேம்பல்லாகப் பிறந்தவர். பானர்மேன் என்ற பெயர் 1871இல் அவரது பெயருடன் சேர்க்கப்பட்டது. 1905இல் பதவியில் இருந்த ஆர்தல் ஜேம்ஸ் பால்ஃபோர் பதவி விலகியபிறகு கேம்பல் பானர்மேன் இங்கிலாந்தின் முதல் அதிகாரபூர்வ பிரதம மந்திரியாக ஆனார். வழக்கத்திற்கு மாறான பலம் பொருந்தி அவரது அமைச்சரவையில் எதிர்காலத்தில் பிரதமராக வந்த இருவர் (அஸ்குவைத்தும், லாயிட் ஜார்ஜூம்) சேர்க்கப்பட்டிருந்தனர். 1906 பொதுத் தேர்தலில் அவர் லிபரல் கட்சிக்காரர் களுக்குத் தலைமை தாங்கி  ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.
தாராளக் கொள்கை கொண்டவர் என்பதை விட அவரை தீவிரக் கொள்கை கொண்டவர் என்றே கூறலாம். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவதையும், அயர்லாந்துக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதையும்  அவர் ஆதரித்தார்.  முதியோர் ஓய்வூதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபட்டார். போயர் போரில் இங்கிலாந்து நாட்டு வீரர்கள் விலங்காண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்தார். தென் னாப்பிரிக்காவுக்கு சுயஆட்சி உரிமையை அளிக்க ஏற்பாடு செய்தார்.  வேலை நிறுத்தம் செய்யும் உரிமையைத் தொழிலாளர்களுக்கு அளித்த 1906 வர்த்தக வழக்கு சட்டத்தை நிறைவேற்றினார்.
தேர்தலுக்குப் பின் ஓராண்டு கடந்து 1907இல், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவருக்கு 1908இல் இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் தனது பதவியை விட்டு விலகினார். அவரை அடுத்து அஸ்குவித் பிரதமராக ஆனார். அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து டவுனிங் தெரு 10ஆம் எண் கொண்ட பிரதமர் இல்லத்திலேயே அவர் இறந்துபோனார்.
அவர் பேசிய இறுதி சொற்கள்: இதுவே எனது முடிவு அல்ல.

இந்தியப் பொருளாதாரம்

பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்-தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம், காசு கிடையாது.

 எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு பண்டத்தைக் கொடுத்து, மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்வார்கள். கூலியாட்கள், கைத்தொழில் செய்வோர், ஏவலாள் ஆகியோருக்கும் தானியமே கொடுப்-பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் - பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக ஏதும் கொடுப்பதில்லை.

பெருத்த மிராசுதார்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான், பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப் போட்டு வைத்திருப்-பார்கள். பண்டமாற்றைத் தவிர, சாதாரண மக்கள் பணத்தைப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.

ரூபாய், நாணயம் இவை நம் நாட்டு மொழியல்ல, சின்னப் பணம் அதாவது ரூ.1-க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும், எத்தனை பணம்? என்று தான் கேட்பார்கள். செல்வமுள்ளவனையும் பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலிய-வை-களிலும் 100 பணம் 200 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு-வார்கள். சமீப காலம் வரைகூட மலை-யாளத்தில் திருவாங்கூர், கொச்சி இராச்சியத்தில் சிவில் கோர்ட்டில், ரூபாய் என்று பிராது போடுவதில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும் அதைப் பணமாகப் பெருக்கி, அந்தப் பண எண்ணிக்கை-யைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்-பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே, பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை-விடச் சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால், பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்ட-மில்லையானால் வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலையில்லை. இதுபோலவே இதற்குமுன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கு முன் வந்த ஆரியர்-களுக்கும் இந்த நாட்டில் வேலையில்லை.

சாமி, பூஜை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படி-யில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்-கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கலியாணம் முதலியவை-களால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கை-யைத் தொடங்க வேண்டியிருக்கிறது. இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்-களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்-சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் மேற்கண்ட சடங்கு-களும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம் பூசை ஆகியவை-களுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்-கள் பெரும்பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. ஆகவே, இந்த மாதிரியாக-வெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில் தான் பொருளா-தாரத்தில் சீர் அடைய முடியும்? நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் கவனியுங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை, மேல்நாடுகளைப் பார்த்து - நாளுக்கு நாள் செலவை அதிகரித்து வருகின்றோம்; வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட அதிக ஆடம்பரங்களை விரும்புகின்றோம். இவை-யெல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்ற-மென்றோ சொல்லவில்லை. ஆனால், மேல்-நாட்டார் எப்படிப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தமது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக் கொள்கிறார்களோ, அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டு, வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டுதானே அதில் பிரவேசிக்க வேண்டும்? அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன்? மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து பன்மடங்கு இலாபம் அடை-கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு - இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானத்தோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்-கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை மதமும் கடவுளும் அடுத்த ஜென்மமுமேயாகும். மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும், அநேகமாய் எல்லாவற்றையும் மேற்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளு-கின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்-திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே - பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்-பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஆகிவிட்டது. அது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக்கும் குடியான-வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ் ஜாதிக்-காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவுகூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது உறுதி.

நமது பொருளாதாரக் கஷ்டமெல்லாம்- முதலாவது அனாவசியச் செலவுகளுக்கும் அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமேயாகும். 100-க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவதனா-லேயே வீணாகி விடுகின்றன.

இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கத்தில் பொருள்க-ளெல்லாம் போய்ச் சேரும் படியாகவும் விடுகின்றன.

மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும் சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவிடும்-படியான முறைகளே இங்கு வெகு காலமாக இருந்து வருகின்றன. அதாவது, புத்தியைச் செல-வழித்துக் குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்-விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியா-வின் பொருளாதாரக் குறைவிற்குக் காரணமாகும்.

- தந்தை பெரியார்

(களக்காட்டில், 27.12.1930-இல் சொற்பொழிவு, குடிஅரசு 18.1.1931)

Thursday, May 30, 2013

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்?

மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக் களாலான வேட்கை மய்யம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது அந்த வேட்கை மய்யத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டா கிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும்போதும் வேட்கை மய்யத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப் பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதை விட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணம்.

தொலைக்காட்சித் திரைகளில் உருவத்துக்குப் பின்புறம் நிழலுருவம் தோன்றுவது ஏன்?

தொலைக்காட்சி செய்கைகள் ஒளிபரப்புக்காக, உயர் அதிர்வெண் கொண்ட வானொலி அலைகளைப் போன்றே செலுத்தப்படுகின்றன. 

இவ்வலைகள் ஆன்டெனாக்களில் சேமிக்கப்பெற்று, பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியினுள் இருக்கும் மின்னணு மற்றும் படக்குழாய்களால் படங்களாக மாற்றப்படுகின்றன. 

தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் சுற்றி பல அடுக்கு உயர்மாடிக் கட்டடங்கள் சூழ்ந்திருக்குமானால், மின்காந்த அலைகளை, அக்கட்டடங்கள் மறிக்கும். இவ்வாறு மறிக்கப்பட்ட அலைகளையும் ஆன்டெனாக்கள் ஏற்றுக் கொள்ளுகின்றன. 

இந்த அலைகள் ஏற்கெனவே நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சேமிக்கப்பெற்ற அலைகளைவிட ஓரளவு நீண்டிருக்கும். இவ்வலைகளால் உருவாக்கப்படும் படம் மூலப் படத்திற்குப் பின்னால் நிழலுருவமாகக் காட்சியளிக்கும்.

பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?

பறவைகளுக்குப் பற்கள் கிடையாது!! ஆனால் எப்படி உண்கின்றன என்று யாராவது யோசித்தீர்களா? அனேகமாக அனைவர்க்கும், குழந்தைகள் உட்பட, பறவைகளுக்குப் பற்கள் இல்லை என்பது தெரிந்திருக்கும். கோழி, புறா,. குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான ஆகாரத்தைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். அவை பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை எப்படி ஜீரணிக்கின்றன?
இதற்கான பதில், உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின்(Stomach) கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள விஷேச அமைப்பான Gizzard என்னும் பகுதியாகும். மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது Gizzard ன் வேலையாகும். கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்ய Gizzard பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும் (Gizzard stones or Gastroliths), மணற்துகள்களையும் (bits of gravel)பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது. சிலவகையான முதலை வகையான ஊர்வன, Dinosaurs,, மீன்கள், மண்புழுக்களுக்கு இருப்பது போல Gizzard அனைத்து வகையான பறவைகளுக்கும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் Gizzard தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் நொதியப்பூச்சு (Enzymes) இருக்கும். ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு Gizzard என்பது பல் மருத்துவச் செலவில்லாத உபரிப் பற்கள் நிரம்பிய மேசை இழுப்பறைக்கு ஒப்பாகும்.